நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அஞ்சலி

அஞ்சலி 

deepam
தலை நகர் - புது தில்லியில்  ஆறு கொடியவர்களால் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மருத்துவ மாணவி உயிர் வாழப் போராடி - மாண்டாள்..

துவாரகாவில் ரகசிய இறுதிச்சடங்கு. உடல் தகனம் செய்யப்பட்டது. 


வன்கொடுமைக்கு  ஆளான  23 வயது  மருத்துவ மாணவி உயிர் வாழ வேண்டி 13 நாட்கள் போராடி - ஓய்ந்து - உயிர் ஒடுங்கினாள்....
அந்த இளம் பெண்ணின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் . என்ன பாவம் செய்தாள் இந்த பெண்? ...மிகவும்  வருத்தம் தரும் செய்தி இது....

இப்படி எரியும் நெருப்பில் இடுவதற்காகவா.... இத்தனை காலம் பேணி வளர்த்தார்கள்?.....சிதையின் நெருப்பு அணைந்து விடலாம்!.... பெற்றவர்கள் வயிற்றில்  எரிகிறதே நெருப்பு!....

கல்லூரிக்கோ, பள்ளிக்கோ அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றிலே பெண்ணை பெற்ற தகப்பனும் தாயும் தீயில் நிற்பது போல  இருக்கிறார்கள்.. நெருப்பை வயிற்றில் கட்டி கொண்டு இருக்க வேண்டி உள்ளது. நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை நிம்மதி இல்லாமல் ஆக்கிக் கொண்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு எந்தவித தண்டனை அளித்தாலும் அந்த தண்டனை மட்டுமே  தீர்வாகிவிடாது.

தனி மனித ஒழுக்கம் பேணிக் காக்கப்பட வேண்டியது அவசியம்...

''நேற்று - இன்று - நாளை'' என பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இளம் பெண்களும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. ஒவ்வொரு இளைஞனும் சக இளம் பெண்களை சகோதரிகளாக பாவித்துப் பழக வேண்டியது அவசியம்... பெண்ணைத் தாயாக சகோதரியாக மகளாக பாவித்துப் போற்றிக் கொண்டாடிய மண் இது.

ஈனர்கள் வெளியேற்றிய நாற்ற, சீர்கேடுகள் கலாச்சாரம் நாகரிகம் என்ற பெயர்களில் இங்கும் பரவியதால் - பரப்பப் பட்டதால் - பரிதவித்து நிற்கிறது - பண்பாடு மிக்க பாரதம்...
 
அனாவசியமாக இளம் பெண்கள் இரவில் தக்க பாதுகாப்பு இன்றி வெளியே வருவதில் உள்ள சிக்கல்களை அமைதியான முறையில் சிந்திக்க வேண்டியது அவசியம்...

நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தரவில்லை இன்றைய கல்வி நிலையங்கள்.. பணம் சம்பாதிப்பதே - இருதரப்பினருக்கும் லட்சியமாகி விட்டது. ஆசிரியர்களோ , கல்வி நிறுவனங்களோ - பிள்ளைகளின் சமுதாய ஒழுக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதில்லை...

வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களை மாசு படுத்துவதற்கே - இன்றைய  ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இயங்குகின்றன...இதிலிருந்தெல்லாம் மீண்டு பிள்ளைகள் நல்லபடியாக வளர்வது பெரும்பாடுதான்!....

பெற்றோர்களும் பிள்ளைகளை ஆணாகட்டும்... பெண்ணாகட்டும்... நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

''தீதும் நன்றும் பிறர் தர வாரா...''

இது மாதிரியான  கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கட்டும்.. தவிரவும்  சட்டங்களும்  நீதியும் மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியமும் நேர்ந்துள்ளது. இதுவே தருணமாக அமையட்டும்.

உடல் வந்த ஒரு மணி நேரத்திற்குள்  தகனம் செய்யப்பட்டது - என செய்தித் தாள்கள் கூறுகின்றன. நீதி கேட்டுப் போராடும் இளைஞர்களின் மனநிலையினை எண்ணி அரசு அச்சப்படுகிறது போலும்...

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர்
                                                   - திருக்குறள்..

துஷ்டர்களை ஒடுக்கத் தெரியாத, இயலாத அரசு அமைப்புகள் நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை.

நீரில் அஸ்தி  கரைவதற்குள் கொடியவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நிறைவேற்ற வேண்டும்...

கொடியவர்களின் அஸ்தி நீரில் கரையும் வரையில்,

அந்த இளம் பெண்ணின் அஸ்தி கரைவதற்கு வாய்ப்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..