நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 20, 2013

திருப்பதிகம் - 01

ஓம் நமசிவாய!... 


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்..

திருத்தலம்
திருஅதிகை வீரட்டானம் 

இறைவன் - ஸ்ரீவீரட்டானேஸ்வரர்
இறைவி - ஸ்ரீதிரிபுரசுந்தரி
தலவிருட்சம் - சரக்கொன்றை
தீர்த்தம் - கெடிலநதி

தலப்பெருமை 
திரிபுர அசுரர்களை ஈசன் புன்னகையால் எரித்து சாம்பலாக்கிய தலம். 

புறச்சமயம் சார்ந்திருந்த மருள்நீக்கியார் - சூலை நோயால் அவதியுற்று தமக்கை திலகவதியார் அளித்த திருநீற்றைப் பூசிக் கொண்டு இறைவனை வணங்கிப்  பதிகம் பாட - நோய் தீர்ந்து நலம் பெற்றார்.

மருள்நீக்கியாரின் தமிழ் கேட்டு மகிழ்ந்த  இறைவன் - திருநாவுக்கரசு எனும் திருப்பெயரை அளித்தனன்.

முதல் தேவாரப் பதிகம் இதுவே!..

ஐந்தாம் திருமுறை - முதல் திருப்பதிகம்.

கூற்றாயின வாறு விலக்ககிலீர் 
கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் 
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.

நெஞ்சம்உமக்கே யிடமாகவைத்தேன் 
நினையாதொருபோதும் இருந்தறியேன்
வஞ்சம்இது ஒப்பது கண்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை 
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் 
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் 
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் 
பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலை
கொண்டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

முன்னம்அடி யேன்அறி யாமையினான் 
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் 
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ 
தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் 
கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்
கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் 
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் 
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 
உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் 
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே. 

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் 
ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் 
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே 
பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் 
வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் 
சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே 
கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் 
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை 
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் 
அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.
  
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் 
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் 
அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் 
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.

திருச்சிற்றம்பலம்
* * *       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..