நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 03, 2013

சிவராத்திரி - 01

மாசி மாதம் 26-ஆம் நாள் (10-03-2013) ஞாயிறன்று இரவு மகாசிவராத்திரி.

தியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் ஜோதியாகிய சிவபெருமான் லிங்கமாக வெளிப்பட்டருளிய புண்ணிய நாள் மகாசிவராத்திரி . இந்த நாளில், நள்ளிரவில் லிங்கோத்பவ காலத்தில் தரிசனம் தருகிறார் பரமேஸ்வரன்.
மகாபிரளயத்தின் போது சர்வ உலகமும், சிவபெருமானிடம் ஒடுங்கியது. ஐயனை விட்டு அகலாத  - என்றும் பிரியாத அம்பிகையும் சிவமூர்த்தத்துள் ஒடுங்கினாள். பின் உள்ளிருந்து வெளிப்பட்டு - போற்றி வணங்கி நின்ற நாளே மகா சிவராத்திரி என்பர் ஆன்றோர்.

பிரளயத்தின் போது சர்வமும்  பெருமானிடம் ஒடுங்கி எங்கும் இருள் சூழ்ந்த வேளையில் ...  உலக உயிர்கள் உய்வடையவும் மீண்டும் சிருஷ்டியாகவும்  உமையன்னை, நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை வழிபட்டதன் பயனாக உலகத்தில் மீண்டும் ஜீவசிருஷ்டி துவங்கியது. இந்த அடிப்படையில் தான் சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நான்கு ஜாம பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.


மாசி மாத, கிருஷ்ண பட்சத்தில் வரும் மகாசிவராத்திரி - நாம் நலமடையவும் நம் முன்னோர்கள் நற்கதியடையவும் நம் சந்ததியினர்  நலமுடன் திகழ்ந்து வாழ்வாங்கு வாழவும்  அம்மையப்பனை  போற்றி வணங்கி வழிபட  வேண்டிய திருநாள்.   

''...சிவராத்திரியன்று  உபவாசம் இருந்து நான்கு காலத்திலும் வழிபடுவோர்க்கு சகல நன்மைகளுடன் முக்தியும் அருளவேண்டும்..'' - என அம்பிகை வேண்டிக் கொள்ள, அம்பிகையின் வழிபாடுகளினால் மகிழ்ந்திருந்த எம்பெருமான் - அவ்வாறே வரம் அருளினார். எனவே மற்ற தினங்களில் நாம் செய்யும் வழிபாடுகளை விட  - சிவராத்திரி அன்று செய்யும் வழிபாடுகள் பன்மடங்கு நன்மைகளைத் தரும் என்பது தாத்பர்யம்.  

நந்தியம்பெருமானுக்கு சிவராத்திரியின் மகிமைகளை ஈஸ்வரனே உபதேசித்து அருளினார். அதன்பின் ஐயனின் அனுமதியுடன் - முதற்குருவாக இருந்து சிவகணங்களுக்கும் முனிவர்களுக்கும் நந்தியம்பெருமான் உபதேசித்தார். சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து நான்முகனும் மஹாவிஷ்ணுவும்  - சரஸ்வதியையும் மஹாலக்ஷ்மியையும் அடைந்தனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.

மகா சிவராத்திரி நாளில் நடந்தவை!
மகா பிரளயம் உண்டானபோது மீண்டும் உலகைப் படைக்க அம்பிகை சிவ பெருமானை வழிபட்டு தவம் இருந்த திருநாள்.

அடி - முடி தேடிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு ஈசன், லிங்கத்தில் பிரசன்னமான நாள். பின்னொரு சமயம் அம்பிகை வழிபட்டு ஈசனின் திருமேனியில் சரிபாதியாகிய  நாள்.

பாற்கடல் கடையும் போது வெளிப்பட்ட விஷத்தை பெருமான் உண்ண... அது  அம்பிகையின் வளைக்கரம் பட்டு கண்டத்திலேயே பொலிந்த நாள். 

அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் பெற்ற நாள். திருக்கடவூரில் மார்க்கண்டேயனுக்காக, ஈசன் - எமனை  சம்ஹரித்த நாள். 



திருக்காளத்தியில் திண்ணப்பன் தன் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்து கண்ணப்ப நாயனாராக உயர்ந்த நாள்.

- இப்படியாக புண்ணிய நிகழ்வுகள் பல சிவராத்திரியன்று நிகழ்ந்தன  என்பர்.

சிவராத்திரி அன்று சூர்யோதயத்தில் விழித்து இல்லத்தில் வழிபாடு செய்து பகலில் உபவாசம் இருந்து, எம்பெருமானின் நினைவில் திளைக்க வேண்டும்.  தேவார திருவாசக திருப்பதிகங்களைப் பாராயணம் செய்தல் வேண்டும்.

அன்று இரவில் கண் விழித்திருந்து சிவாலயத்தில் தரிசனம் செய்வோருக்கு, வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். இவ்வேளையில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும், ஐந்தெழுந்து மந்திரமான ''ஓம் நமசிவாய'' என்னும் மந்திரத்தை தியானிப்பதாலும் ஜன்மம் கடைத்தேறும் என்பது சான்றோர் வாக்கு. 

முறைப்படி தீட்சை பெற்றவர்கள், தமது இல்லத்தில்  சிவலிங்கத்துக்கு நான்கு காலமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிவ பூஜை செய்வார்கள். 

ஈசனிடத்தில் அன்புடைய எவரும் சிவபூஜை செய்யலாம். ஏற்ற தாழ்வுகள் ஏதும் இல்லை. உடல் நலம் ஒத்துழைத்தால் உபவாசம் மேற்கொண்டு ஆலய வழிபாடு செய்யலாம். இயலாதவர்கள் சிவாலய அபிஷேக ஆராதனைகளுக்கு இயன்ற பொருளுதவிகளைச் செய்து வழிபாடுகளில் கலந்து கொள்ளலாம்.

சிவராத்திரி அன்று இரவு முழுதும் கண் விழித்து வழிபாடு செய்ய இயலா விட்டாலும் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்தில் மட்டுமாவது சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.

நமக்காக - நம் பொருட்டு அம்பிகை, சிவபெருமானை பூஜித்த இந்த நாளில், நாமும் முறைப்படி உபவாசம் இருந்து சிவபெருமானைப் போற்றி வழிபட... சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்  என்பது திண்ணம்.

நமசிவாய வாழ்க!... நாதன் தாள் வாழ்க!...
இமைப்பொழுதும்  என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..