நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 23, 2013

ஆனந்தம் தரும் ஆனி


சூரியன்  - தை முதல் நாளில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தொடங்கிய  உத்ராயண பயணம் நிறைவுறும் இனிய மாதம் ஆனி.

கோடைக் காலத்தின் கடைசி மாதமாகிய ஆனியில்சைவ, வைணவ திருக்கோயில்களில் பற்பல புண்ணிய விசேஷங்கள் நிகழ்கின்றன.


ஆனி மாதத்தில் தான்   தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடவல்லானாகிய எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் நிகழ்வுறுகின்றது

அதே நாளில் திருஆரூரில் தியாகராஜப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்வுறும்

அன்றைய தினம்  - தில்லையில்  நடராஜப்பெருமானும் திருஆரூரில் தியாகராஜப் பெருமானும் தேரில் எழுந்தருளி திருவீதி பவனி வருவர். தில்லையில் ஆனந்த நடனம் எனில் திருஆரூரில் அஜபா நடனம் என்பது திருக்குறிப்பு.


தில்லையை - பொற்கோயில் என்றும் திருஆரூரை - பூங்கோயில் என்றும் சான்றோர் குறிப்பிடுவர்

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில், திருமஞ்சனப் பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. திருமஞ்சனத் திருவிழாவினைத் தரிசிக்கும் கன்னியர்  விரைவில் கல்யாணக் கோலம் கொள்வர் என்பதும் சுமங்கலிகள் மாங்கல்ய பாக்கியம் பெறுவர் என்பதும் ஐதீகம்.

தில்லையிலும் திருஆரூரிலும் போலவே -

எல்லா சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கும்  சிவகாமசுந்தரிக்கும்  திருமஞ்சன வைபவத்தினை சிறப்புடன் நடத்தி அன்பர்கள் மகிழ்கின்றனர்.

மேலும்ஆனி மாதத்தில் கோலக்குமரன் குடிகொண்டுள்ள பழனியில்,   அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.  

கேட்டைநட்சத்திரத்தன்று - மலைக்கோயிலில் உச்சி காலத்தில் உற்சவ மூர்த்திக்கும் , மூல நட்சத்திரத்தன்று  - திருஆவினன்குடியாகிய அடிவாரத் திருக்கோயிலில்  மாலை வேளையில் குழந்தை வேலாயுதப் பெருமானுக்கும்  அன்னாபிஷேகம் நிகழ்கின்றது

பழனியில் - ஜேஷ்டாபிஷேகம் எனும் ஆனித் திருமஞ்சனம் - விசாக நட்சத்திரத்தில் நடைபெறும்

ஆனி மாத பெளர்ணமியை அனுசரித்து - காரைக்காலில் மாங்கனித் திருவிழா வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது.

கையிலாய நாதர் பிட்க்ஷாடனராக வீதியுலா வரும் போது நேர்த்திக் கடனாக மாம்பழங்களை வீசி மக்கள் இன்புறுகின்றனர்.

ஆனி - மக நட்சத்திரத்தன்றுதான் தில்லை நடராஜப் பெருமானுடன் மாணிக்க வாசகர் ஜோதியாக இரண்டறக் கலந்தார். ஆனிமாதத்தின் தேய்பிறை ஏகாதசி அன்று - பெருமாளைத் திரிவிக்ரமப் பெருமானாக வழிபட, குருநிந்தனை செய்ததும், பொய் சாட்சி கூறியதுமான பாவ வினைகள் விலகும் என்பர்

ஆனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் ஆஷாட நவராத்திரி எனப்படும்.  பொதுவாக ஆஷாட நவராத்திரி வடமாநிலங்களில்  கொண்டாடப்படுகின்றது.

தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி வெகு சிறப்பாக அனுசரிக்கப்பெறுகின்றது


ஒன்பது நாட்களும் காலையில் ஸ்ரீவராஹி அம்மனுக்கு  மூல மந்திரத்துடன் யாகசாலை பூஜையும்மாலையில் மகாஅபிஷேகத்துடன் அலங்காரமும் மகாதீப ஆராதனையும் நிகழும்.  

ஒன்பது நாளும் ஒன்பது வகையான அலங்காரத்துடன் திகழும் அன்னை வராஹி - பத்தாம் நாள் அன்று,

கோயில்யானை முன் செல்ல, செண்டை வாத்யங்களும் சிவகண கயிலாய வாத்தியங்களும் சேர்ந்திசைக்க - கோலாகலமாக நான்கு ராஜவீதிகளிலும் எழுந்தருள்கின்றாள்

திருச்சி - உறையூரில்,   வெயில், மழை, பனி, காற்று  - என எதுவானாலும் தாங்கிக்கொண்டு வெட்டவெளியில் வீற்றிருக்கும் ஸ்ரீவெக்காளி அம்மனுக்கு ஆனி பெளர்ணமியில் மாம்பழ அபிஷேகம் நடத்தப்படுகின்றது


மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானஸ்வாமிக்கும் மட்டுவார்குழலி அம்பிகைக்கும் - நேர்த்திக் கடனாக வாழைத்தார்களை அன்பர்கள் செலுத்துவதும் ஆனி பெளர்ணமியில் தான்

அம்பலமாகிய தில்லையில் ஸ்ரீநடராஜனுக்கு திருமஞ்சனம் என்றால்

அரங்கமாகிய ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனுக்கு ஆனியில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுகின்றதுகேட்டை நட்சத்திரமே ஜேஷ்டா எனப்படுவது.

கங்கையினும் புனிதமாய காவிரியிலிருந்து தங்கக்குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மேல் வலம் வந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன் தைலக்காப்பு நடைபெறும். இவ்வேளைகளில் அரங்கனின் திருமுக தரிசனம் மட்டுமே!. 


அதன்பின் - திருஅரங்கனுக்கு பலவகையான பழவகைகளுடன் தேங்காய்த் துருவலும் நெய்யும் நிவேத்யம் செய்யப்படும். அடுத்த வெள்ளியன்று ஸ்ரீரங்க நாயகிக்கு இதேபோல ஜேஷ்டாபிஷேக வைபவம் சிறப்புடன் நடைபெறும்.

இவ்வண்ணமாக

ஆனி மாதத்தில் மங்கள வைபவங்களைக் கண்டருளும் -

நடராஜனும் ரங்கராஜனும் 

நம் அல்லல்களைத் தீர்த்து வைத்து 

ஆனந்தமான வாழ்வினை அருள்வார்களாக!... 

2 கருத்துகள்:

  1. விரிவான விளக்கமான சிறப்பு தகவல்கள்...

    நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்!..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..