நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 28, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 2




தேவேந்திரனின் துயரம்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஸ்வாமியே சரணம்!..

திங்கள், நவம்பர் 25, 2013

ஸ்ரீ வைரவர்

''கால பைரவாஷ்டமி''


ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன் கைவாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங்காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே!..(6/20/1)
                                                                                           - திருநாவுக்கரசர்                                  

முன்னொரு காலத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையில் -  '' யார் பெரியவர்'' என்று பெருங்கலகம் விளைந்தது. அப்போது சிவபரம்பொருள் நெற்றியிலிருந்து, வைரவரைத் தன் அம்சமாகத் தோற்றுவித்து அவர்களிடையே அனுப்பினார். 

அக்னி ஜூவாலைகளுடன் படர்ந்த கேசம். மூன்று திருவிழிகள். ஒளிரும் கோரைப் பற்கள். தண்டத்துடன் சூலம், உடுக்கை, பாசம் தாங்கியவராக ,   ஒலிக்கும் மணிகள் புரளும் ஆரத்துடன் வெண் சிர மாலையும் பூண்டு . இடையில்  நாகக் கச்சை புரள, திருவடிகளில் வீரத்தண்டைகள் முழங்க  - அவ்விடத்தில் தோன்றிய வைரவரைக் கண்ட பிரமன் - (அச்சமயத்தில் பிரம்மனுக்கு ஐந்து முகங்கள்) - அல்லாத சொல்லாக - '' வா என் மகனே'' - என்று அழைக்கவும் ,

மூண்டெழுந்த சினம் விழிகளில் தெறிக்க - முந்தி நின்று அகங்காரத்துடன் அல்லாதன மொழிந்த அந்த முகத்தைத் தன் கை நகத்தினால் கிள்ளியெடுத்தார் வைரவர்.

ஸ்ரீ பைரவர், பட்டீஸ்வரம்.
இப்போது திசைக்கு ஒன்றாக பிரம்மனுக்கு நான்கு முகங்கள். ஆறாத சினத்துடன் அடுத்த தலையையும் பறிக்குமுன் -  அகங்காரத்துடன் பொய் உரைத்த பிரம்மனை மன்னித்து அருளுமாறு, திருமால் வேண்டிக் கொள்ள - 

சினம்  தணிந்த  சிவபெருமான், நான்முகனை மன்னித்ததுடன்

'' வேதம்  ஓதுபவர்களுக்கு  நீயே குருவாக விளங்குவாய்!..'' - என்று மீண்டும் படைப்புத் தொழிலை - செருக்கு நீங்கிய பிரம்மனிடமே அருளினார்.

இச்செயல் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாக தேவாரம் முழுவதுமே புகழ்ந்து போற்றப்படுகின்றது.  

அட்ட வீரட்டங்களுள் முதலாவதான இச்செயல் நிகழ்ந்த திருத்தலம் - கண்டியூர். 

வைரவ மூர்த்தியின் முதற் திருத்தோற்றம் நிகழ்ந்த கண்டியூர் - தஞ்சையில் இருந்து திருவையாறு செல்லும் வழித்தடத்தில் உள்ளது.

ஈசன்  ''ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீஸ்வரர்''. அம்பிகை - ''மங்களநாயகி''.  
திருச்சேறை
 விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் 
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!..(4/73/6 )
                                                                             
தேவாரத்தில் ஸ்ரீவைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது.

திருச்சேறை என்னும் திருத்தலத்தில்  இறைவனைத் தரிசித்த போது - அப்பர் பெருமான் -  வைரவரின் திருமேனியழகை - பாடிப் புகழ்ந்து - மகிழ்ந்தனர்.

''..பிரபஞ்சம்  எங்கும் விரிந்து பரவும் பற்பல ஒளிக் கதிர்களுடன் திகழும்  திரிசூலம். வெடியென முழங்கும் உடுக்கை. இவற்றைத் தம் திருக்கரங்களில் ஏந்திய வண்ணம் கால வைரவன் எனத் தோன்றி -

தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து - ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட போது -

இத்தகைய அருஞ்செயலைக் கண்டு,   உமையவள் அச்சம் கொண்டனள். அப்போது, அம்பிகையை நோக்கி - பிரகாசமாகிய   பெருஞ்சிரிப்புடன் அருள் செய்த செந்நெறிச் செல்வனே!.. சிவபெருமானே!..'' - என்பது திருப்பாடலின் பொருள்.

திருச்சேறை குடந்தைக்கு அருகில் உள்ளது.
ஈசன் திருப்பெயர் '' ஸ்ரீசாரபரமேஸ்வரர். அம்பிகை - ''ஞானவல்லி''.


சிவபெருமான் யானையை உரித்த திருத்தலம் வழுவூர். 

இத்தலத்தில் ஈசன் ''ஸ்ரகஜ சம்ஹார மூர்த்தி'' எனவும் அம்பிகை ''பாலகுஜாம்பிகை'' எனவும்  திருவருள் புரிகின்றனர்.   

யானை உரித்த திருக்கோலம் பஞ்சலோகத் திருமேனியாக விளங்குகின்றது.

வழுவூர்,  திருஆரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் மங்கநல்லூருக்கு உட்புறமாக 2 கல் தொலைவில் உள்ளது. 

யானையை உரித்த - திருக்கோலத்தினை பல்வேறு கோயில் கோபுரங்களில் சுதை வடிவாகத் தரிசிக்கலாம். எனினும், 

யானையை உரித்த திருக்கோலம் திருத்துறைப்பூண்டி- அருள்மிகு பிறவி மருந்தீசர் திருக்கோயிலிலும் தனியாக கருவறையில் பெருந் திருமேனியாகத் திகழ்கின்றது.

வைரவர் ஞானமூர்த்தி. அளப்பரிய வலிமையுடையவர். தம்மை அண்டினோர்க்கு சத்ரு பயத்தை நீக்கி, அடைக்கலம் அருள்பவர்.  

காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யத்திலிருந்து உலகைக் காத்தருளும் பொறுப்பினை - தம்முள்ளிருந்து தாமாக வெளிப்பட்ட வைரவரிடமே - சிவபெருமான் வழங்கினார். 


ஸ்ரீ வைரவர் - காவல் நாயகம் என்பதால் நாய் இவருடன் திகழ்கின்றது. 

ஆணவம், அகங்காரம், செருக்கு, இறுமாப்பு, கர்வம் - இப்படியெல்லாம் நம்முள் மண்டிக் கிடக்கும் களைகளைக் களைந்து

அஞ்ஞான இருளை அகற்றி - ஞான விளக்கினை ஏற்றினால் - 

அதுவே மங்களம்  - சுப மங்களம்!..  என்பது இந்த புராணத்தின் தத்துவம்.

இந்த நிலையை நாம் எளிதில் எய்திட உறுதுணையாய் விளங்குவது, வைரவ  வழிபாடு.

தேய்பிறை அஷ்டமி மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் வைரவ வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - வைரவர்  தோன்றிய திருநாள். இந்நாளை ''கால பைரவாஷ்டமி'' என்று வழங்குகின்றனர்.

சிவபெருமான் உறையும் திருக்கோயில்கள் அனைத்திலும் ஈசான்ய  (வடகிழக்கு)  மூலையின் ஒரு பகுதியில் வைரவரின் திருமேனி விளங்கும். வைரவரின் அருகில் சனி பகவான் நிச்சயம் வீற்றிருப்பார். ஏனெனில்,   

சனி  பகவானுக்கு வைரவரே முழுமுதற் குரு என்பதாக ஐதீகம். இதனால் வைரவரை மனப்பூர்வமாக வழிபடும் அன்பர்களுக்கு சனி பகவானின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதனை சொல்லவும் வேண்டுமோ!..


ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை தியானித்து,  தினமும் காலை  மாலையில் பக்தியுடன் பாராயணம் செய்து போற்றுவோர்க்கு பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. 

வைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. 

அஷ்டமி அன்று மாலையில் திருக்கோயில் சென்று ஈசனை வணங்கி வலம் வந்து, ஸ்ரீ வைரவரின் திருவடிகளின் அருகில் விளக்கேற்றி வைத்து -   

நம்மைப் பற்றி, நாமே - முறையிடுவோம்!.. 

நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக நம்முள்ளேயே வேரூன்றி விரிந்து பரந்திருக்கும் அகங்காரம் எனும் விஷ விருட்சத்தைக் கிள்ளி எறியும்படி - தலை வணங்கி வேண்டிக் கொள்வோம். 

ஸ்வானத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ; பைரவ ப்ரசோதயாத்:

 ''சிவாய திருச்சிற்றம்பலம்'' 

வெள்ளி, நவம்பர் 22, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் -1



ஸ்ரீ ஐயப்ப தரிசனம்

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஸ்வாமியே சரணம்.. ஐயப்பா!..
***




ஞாயிறு, நவம்பர் 17, 2013

திருக்கார்த்திகை

தட்சிணாயணத்தின் ஐந்தாவது மாதம். கால கதியில் எட்டாவது மாதம்.

அடியும் முடியும் அறிய இயலாத அகண்ட ஜோதிப் பிழம்பாக - எல்லாம் வல்ல பரம் பொருளாகிய சிவபெருமான் விளங்கியது கார்த்திகையில் என்று சைவ சமயம் போற்றிப் புகழ்கின்றது.  


முழுநிலவும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் சேர்ந்து வரும் நாளே திருக்கார்த்திகைத் திருநாள்.

இந்த புண்ணிய நாளில் - முழுநிலவு உதித்து எழும் வேளையில், தத்தம் இல்லங்களில்  - ஒளிமயமான அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஆராதிப்பது தமிழர்களின் வழக்கம்.

கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (Tks. wikipedia)
இறைவன் ஒளி மயமானவன். ஒளி மயமான இறைவனை ஒளி கொண்டு வணங்குவது எல்லா மங்கலங்களையும் தரவல்லது என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். 


இன்று அதிகாலையில் திரு அண்ணாமலையில் - மகா பரணி தீபம்  ஏற்றப் பட்ட நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கின்றது. 


லட்சோபலட்சம் பக்தர்கள் குழுமியிருக்க - இன்று ஒரு பொழுது மட்டுமே - அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து ஆனந்த நடனத்துடன்  காட்சியளிப்பார்.

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!..

- என்று திருஞானசம்பந்தர் அறுதியிட்டுக் கூறுவதும் அதனால் தானே!.. 

ஆயிரக்கணக்கான திருக்கோயில்களைக் கட்டி எழுப்பிய மாமன்னர்கள் - அத்திருக்கோயில்களில் தீபங்கள் நின்றெரிய பற்பல கட்டளைகளையும் செவ்வனே செய்திருக்கின்றனர் எனில் அதன் சிறப்பு தான் என்னே!..


எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் திருக்கோயில்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தின் தலைவாசலிலும் - வீடு முழுவதும் விளக்கேற்றி அலங்கரிப்பதும் மங்கல மரபாகும். 

கிராமங்களில் - வீட்டின் தலைவாசலில் தீபம் ஏற்றுவதோடு நில்லாமல் மாட்டுத் தொழுவத்திலும், பின்புறம் உள்ள குப்பை மேடு அல்லது உரக்குழியிலும் தீபம் ஏற்றி வைப்பார்கள். 

நாகரிகம் முற்றிப் போனதால் - நகரங்களில் கட்டப்படும் நவீன வீடுகளில் - தலைவாசல் நிலையின் இருபுறமும் மாடப் பிறைகள் கூட அமைக்கப்படுவது இல்லை.


திருக்கார்த்திகை தீப ஆராதனையானது - அனைத்து மங்கலங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். பொதுவாக வீட்டில் விளக்கேற்றுவதற்கு சில சிறப்பான நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு நடந்தாலே - துன்பங்களின் தாக்கம் குறையும் என்பது திருவாக்கு!..

பூஜை அறையில் அல்லது மாடத்தில் - தெய்வத் திரு வுருவங்கள் இருந்தாலும் சரி!.. அழகிய சித்திரங்கள் இருந்தாலும் சரி!.. நடுநாயகமாக ஒரு விளக்கு இருக்க வேண்டியது அவசியம். 

எவர்சில்வர் மற்றும் பீங்கான் - விளக்குகளைத் தவிர்க்கவும்.

விளக்கினைச் சுத்தம் செய்து - சந்தனம், குங்குமம், பூச்சரம் சூட்டி - கிழக்கு முகமாக வைத்து நல்லெண்ணெய் நிரப்பி, வெள்ளைத் திரியை இட்டு சுடர் ஏற்ற வேண்டும். சுடர் ஏற்றிய பின் - அணையாமல் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். 


பூஜை நேரத்தில் இந்த சுடரில் இருந்து வேறு எதையும் ஏற்றக் கூடாது. கற்பூரம் ஏற்றுவதானால் கூட வேறு ஒரு விளக்கில் இருந்து தான் ஏற்றவேண்டும். 

ஏனெனில்  - நடுநாயக விளக்கு மூலஸ்தான மூர்த்திக்கு ஒப்பானது. 

திருவிளக்கின் பிரதான சுடர் கிழக்கு முகமாக ஜொலிக்கும் போது நாம் வடக்கு முகமாக நின்று வணங்க வேண்டும்.


சூரியோதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்திலும் (4.30 - 6.00) அந்தி மாலையில் நித்ய பிரதோஷ வேளையிலும் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.  இவ்வேளையில் தீபமேற்றினால் லக்ஷ்மி கடாட்க்ஷம் கிட்டும் என்பது ஐதீகம். 

ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும்,  அந்தி மயங்கும் மாலை வேளையில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். 

விளக்கை குளிர்விக்கும் போது எக்காரணம் கொண்டும் வாயால் ஊதக் கூடாது. கையை விசிறி போல் வீசி - அணைக்கக் கூடாது. பூவால் குளிர்விக்க வேண்டும். அல்லது தூண்டும் குச்சி கொண்டு திரியை எண்ணெய்யில் அழுத்தி குளிர்விக்க வேண்டும். 


வீட்டில் குத்து விளக்கு ஏற்றும் முன்  விளக்கின் எட்டு இடத்தில் திலகம் சூட்ட  வேண்டும் என்பது மரபு. அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. திருவிளக்கினை - தீபலக்ஷ்மி என்று போற்றுவதே நமது பாரம்பர்யம். 

எனவே ஆதிலக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி , வித்யா லக்ஷ்மி , தன லக்ஷ்மி , தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி , வீர லக்ஷ்மி , விஜய லக்ஷ்மி  - என தியானித்து திலகம் இடவேண்டும். இதனால், வீட்டில் அல்லல் அகன்று ஐஸ்வர்யம் பெருகும். 

எட்டு திலகங்களும் - நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களுடன் சூரியன், சந்திரன் மற்றும் ஆத்மா என்பனவற்றைக் குறிப்பவை - என்றும் கூறுவர். 

தற்போது  வெளியிடப்படும் ஆன்மீகக் கட்டுரைகள் என்பனவற்றில் -

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு என்ன பலன்?
எந்த எந்த திசைக்கு - என்ன என்ன பலன்?
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய எண்ணெய்!

என்றெல்லாம் எழுதப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஓரமாக ஒதுக்கித் தள்ளுங்கள். 

விளக்கிற்கு - பசு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் - இம்மூன்று மட்டுமே உகந்தவை.


தீபங்களின் ஒளி - மனதில் சஞ்சலத்தை நீக்கும். தீப ஒளியினைக் கூர்ந்து நோக்கி - பின் அதை அப்படியே நெற்றியில் தியானிக்க - அற்புதமான காட்சிகளைத் தரிசிக்கலாம்.

சுபம் கரோதி கல்யாணம் ஆயுர் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி விநாசாய தீபஜோதி நமோஸ்துதே..

மங்கலகரமான சுபகாரியங்கள் தடையின்றி நடக்கவும், உடல் நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும், புத்தியில் இருக்கும் இருள் விலகவும் ஜோதி வடிவான தீபலட்சுமியே!.. - உன்னைத் துதிக்கிறேன்!.. 

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகி சிந்தை இடுதிரியா - என்புருகி 
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு 
ஞானத்தமிழ் புரிந்த நான்!.. 

- என்பது பூதத்தாழ்வார் அருளிய திருப்பாசுரம்.


''தீப மங்கல ஜோதி நமோ நம!..'' - என்று அருணகிரி நாதர் முருகனைப் புகழ்கின்றார்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு!.. 

- என்பது ஐயன் திருவள்ளுவப் பெருமானின் திருவாக்கு.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!..

- என்பது வள்ளலார் ஸ்வாமிகளின் அருள் வாக்கு.


பன்னிரு திருமுறைகளில் எம்பெருமானை ஜோதிவடிவாகக் கண்டு தொழும் திருப்பாடல்கள் ஏராளம்.

அவற்றுள்  ஒன்றாக - திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தின்  இனிய பாடல்!..

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..

விளக்கேற்றுவோம்!..
இல்லத்திலும் உள்ளத்திலும்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

சரணம் ஐயப்பா

இருமுடி தாங்கி ஒருமனதாகி 
குரு எனவே வந்தோம்!..
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் 
திருவடியைக் காண வந்தோம்!..


பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்பா!..
ஸ்வாமி சரணம்!.. ஐயப்ப சரணம்!..

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்போ!..  
ஐயப்போ ஸ்வாமியே!.. 

நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே!.. 
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே!.. 
ஐயப்பன்மார்களும்  கூறிக் கொண்டு 
ஐயனை நாடிச் சென்றிடுவார்!..
சபரி மலைக்குச் சென்றிடுவார்!.. 

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

கார்த்திகை மாதம் மாலையணிந்து 
நேர்த்தியாகவே விரதம் இருந்து 
பார்த்தசாரதியின் மைந்தனே உனைப் 
பார்க்க வேண்டியே தவமிருந்து 
இருமுடி எடுத்து எருமேலி வந்து 
ஒருமனதாகி பேட்டை துள்ளி 
அருமை நண்பராம் வாவரைத் தொழுது 
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 


அழுதை ஏற்றம் ஏறும் போது 
ஹரிஹரன் மகனைத் துதித்துச் செல்வார் 
வழிகாட்டிடவே வந்திடுவார் 
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்!..
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் 
கருணைக் கடலும் துணை வருவார் 
கரிமலை இறக்கம் வந்த உடனே
திருநதி பம்பையைக் கண்டிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி சங்கரன் மகனைக் 
கும்பிடுவார் சங்கடம் இன்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்!..

தேக பலம் தா!.. பாத பலம் தா!..
தேக பலம் தா!.. பாத பலம் தா!.. 

தேக பலம் தா - என்றால் 
அவரும் தேகத்தைத் தந்திடுவார்!.. 
பாதபலம் தா  - என்றால் 
அவரும் பாதத்தைத் தந்திடுவார்!..
நல்ல பாதையைக் காட்டிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

சபரி பீடமே வந்திடுவார்!.. 
சபரி அன்னையை பணிந்திடுவார்!.. 
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் 
சரத்தினைப் போட்டு  வணங்கிடுவார்!..
சபரிமலை தனை நெருங்கிடுவார் 

பதினெட்டுப் படி மீது ஏறிடுவார் 
கதி என்று அவனைச் சரணடைவார் 
மதிமுகம் கண்டே மயங்கிடுவார் 
ஐயனைத் துதிக்கையிலே 
தன்னையே மறந்திடுவார்!..


பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்பா!..
ஸ்வாமி சரணம்!.. ஐயப்ப சரணம்!..

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்போ!..  
ஐயப்போ ஸ்வாமியே!..

சரணம் சரணம் ஐயப்பா!..
ஸ்வாமி சரணம் ஐயப்பா!..
சரணம் சரணம் ஐயப்பா!..
ஸ்வாமி சரணம் ஐயப்பா!.. 

முப்பது வருடங்களுக்கும் மேலாக - ஐயப்ப பக்தர்களின் உயிரில் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கும் இப் பாடலை - மீண்டும், ஐயப்ப பக்தர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன். 


ஐயப்பா சரணம்!.. 
உன் அருளாலே உன்னை வணங்கி 
மாலையணிந்து 
விரதம் ஏற்கின்றேன்!.. 

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..


சனி, நவம்பர் 16, 2013

துலா ஸ்நானம்

திருமயிலாடுதுறை!..

இத்தலம் - மாயூரம் என்றும் வழங்கப்பெறும்.  


''ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?..'' - எனும் சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிக பிரசித்தமானது. 

என்ன காரணம்?...

சிவபெருமானின் ஜடாமகுடத்திற்குள் அடங்கியிருந்த - கங்கைக்கு அன்று போதாத நேரம்!.. 

''.. என்னால் தான் மக்களின் பாவங்கள் தொலைகின்றன!.. நான் மட்டும் பொங்கிப் பெருகவில்லை எனில், பாவத்தின் பாரம் தாங்க மாட்டாமல் பூமி பொலிவு இழந்து போயிருக்கும்!..'' 

- என்று எண்ணி கர்வம் கொண்டாள். 

அவ்வளவு தான்!.. 

அந்த எண்ணத்தால் - கங்கை தான் - தன் பொலிவினை இழந்தாள்.. 

மதி கலங்கியதால் - நதி எனும் புனித கங்கை - கதி கலங்கிப் போனாள்!.. 

ஈசனின் சிரத்தில் இருந்தும் -  தகாத எண்ணத்தால் - தனக்கு விளைந்த பாவம் நீங்க பிராயச்சித்தம் அருளுமாறு, இறைவனை நாடி கங்கை பணிந்து வணங்கி நின்றாள்.. 

கங்கையின் பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன் - மயிலாடுதுறை எனும் பதியில் காவிரி ஆற்றின் துலா ஸ்நான கட்டத்தில் நீராடும்படி ஆணையிட்டார். 


அப்படி என்ன பெருமை  - அந்த மயிலாடுதுறைக்கும், காவிரிக்கும்!..  

கங்கை அதிசயித்தாள்.

அந்த பெருமையை - நந்தி தேவர் - கங்கைக்கு விவரிக்கலானார்.

முன்னொரு சமயம்  ஈசன் வேதத்தின் பொருளை அம்பிகைக்கு விவரித்த வேளையில் - திருக் கயிலையின் சாரலில் மயில் ஒன்று தனது அழகிய தோகையை விரித்து ஆடியது. அந்த அழகில் அம்பிகை - ஒரு நொடிப்பொழுது மனம் லயித்தாள். அதைக் கண்டு சினந்த பெருமான் - அம்பிகையை மயிலாகவே - பிறக்கும் படியாக சாபமிட்டு விட்டார். 


அம்பிகை - ஏற்கனவே, இமவான் மகளாகப் பிறந்தபோது இமயாசலத்தில் மயிலாக ஆடிக் களித்தவள் தானே!..  அவளுக்குக் கசக்குமா - மயிலாகப் பிறந்து ஈசனைத் துதிப்பதற்கு!..

அதே வேளையில், காவிரியும் கடும் தவம் செய்து கொண்டிருந்தாள்.. எம்பெருமானையும் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும் என்று!..

எல்லாம் ஒன்றாகக் கூடி வர -

அம்பிகை மயிலாக உருமாறி காவிரிக் கரையினில் சிவ வழிபாடு செய்தனள்.  


காலம் கனிந்தது. 

அம்பிகையின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் தானும் மயிலாகத் தோன்றி உமாதேவியுடன் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தார்.. காவிரியும் அற்புதக் காட்சி கண்டு பெறற்கரிய பேறு கொண்டனள்..


அந்தத் தாண்டவமே மயூர தாண்டவம். மயூரம் என்றால் - மயில். 

ஈசனும் அம்பிகையும் மயிலாகத் தாண்டவமாடிய  தலமே மயிலாடுதுறை. 

இப்படிப் பெருமை கொண்ட திருத்தலமாகிய - மயிலாடுதுறையில் - 

ஈசன் ஆணையிட்டபடி, கங்காதேவி துலா மாதமாகிய  ஐப்பசியில் காவிரி நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கி பாவம் நீங்கினாள் என்பதும், ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை காவிரியை விட்டுப் பிரியாமல் அவளுடனேயே பிரவாகமாகி கலந்திருப்பதாகவும் ஐதீகம்... 

அதன்படி ஐப்பசி முழுதும் மக்கள் காவிரியில் நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கத் தலைப்பட்ட வேளையில், 

வெகு தொலைவில் இருந்து காவிரியில் நீராடுதற்காக திரண்ட அடியார்களுள் நடக்க இயலாத ஏழை ஒருவரும் தன் அளவில் முயற்சிக்க - 

ஐப்பசி கடைசி நாளும் ஆகிவிட்டது.. 

உடன் வந்தவர்கள் விரைவாய் சென்றுவிட நடக்க இயலாதவர்  நிலை பரிதாபமானது.. மனம் உடைந்த அவர் கண்ணீர் மல்கி கசிந்து உருகினார்.  



ஐப்பசி கடைசி நாள் மாலைப் பொழுதுக்குள்  காவிரியில் நீராட இயலாத தன் நிலையை எண்ணிக் கதறினார்.. 

ஏழை அழுத  கண்ணீர் ஈசனின் திருவடிகளை நனைத்தது!. அன்பே  வடிவான சிவமும் அந்த ஏழைக்கு அருள் பொழிய நினைத்தது!..

ஈசன் அடியவர் முன் தோன்றி, 

'' வருந்தற்க!. நாளை கார்த்திகை முதல் நாள் - உம் பொருட்டு கங்கை காவிரியிலேயே கலந்திருப்பாள்!.. நீராடி மகிழ்க!..'' 

- என்று அருள் புரிய, அது முதற் கொண்டு கார்த்திகையின் முதல் நாளும் புனித நாளாயிற்று. 

அதன்படி ஐப்பசி தொடங்கி கார்த்திகை முதல் நாள் (முடவன் முழுக்கு) வரை பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும்படிக்கு காவிரியே கங்கையாகத் திகழ்கிறாள்..

இன்று - ஐப்பசி மாத துலா ஸ்நானத்தின் கடைசி நாள் - கடை முழுக்கு!..

நாளை  - கார்த்திகை முதல் நாள் - முடவன் முழுக்கு!..


மயிலாடுதுறை - எனும் மாயூரம் திருவிழாக்கோலம் பூண்டு விளங்குகின்றது. மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள - காவிரியின் துலா ஸ்நானகட்டத்தில் - தீர்த்த வாரி நிகழ்கின்றது. 

இந்த ஐப்பசி மாதத்தில் பூவுலகில் உள்ள புனித நதிகளுக்கெல்லாம் பாப விமோசனம் அருள்கின்றாள் காவிரி.


ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்!.. 

''தண்ணீரும் காவிரியே!..'' - என்ற திருவாக்கின் படி -   எல்லாம் கங்கையே!.. எங்கும் காவிரியே!..

பரந்து விரிந்த பூவுலகில்- எங்கிருந்த போதும் சரி!..

நீராடும் போது  - ஒரு சொம்பு நீரை எடுத்து,

ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் நமோ நம:

- என்று சிந்தித்து வணங்கி - நீராடினாலும் அன்னை காவேரி அருகிருந்து வாழ்த்துவாள்!..


இன்று இயலாவிட்டாலும் நாளையாவது - முடவன் முழுக்கு - நன் நீராடி - முன் வினை முழுதும் முற்றாக நீங்கப் பெறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..