நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 31, 2016

மார்கழிப் பூக்கள் 16

தமிழமுதம்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்புஉடைத்து..(112) 
***
ஔவையார் அருளிய
நல்வழி

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும்புகழும் பெருவாழ்வும் ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 16


நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்போனே கொடிதோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதேநீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!.. 
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ புஷ்பவல்லி உடனாகிய கோவலன்.,
திருக்கோவலூர்
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா வாயில்
கடைகழியா உள்புகாக்  காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி..(2167)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

ஆறாவது திருத்தலம்
திருக்கோவலூர்



இறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சிவானந்தவல்லி
தீர்த்தம் - பெண்ணையாறு
தலவிருட்சம் - சரக்கொன்றை

திருக்கயிலை மாமலையில்
ஈசனும் அம்பிகையும் ஏகாந்தமாக மகிழ்ந்திருந்த வேளையில்
ஐயனின் திருவிழிகளை தனது தளிர்க்கரங்களால்
மூடி விளையாடினாள் வேதநாயகி..

அந்த விளையாட்டினால் விபரீதம் விளைந்தது..

ஐயனின் திருவிழிகளை மூடிய வேளையில் 
அகிலம் முழுதும் இருளில் மூழ்கியது..

அந்த இருளில் இருந்து அசுரன் ஒருவன் தோன்றினான்..

அவனே அந்தகாசுரன்...

அந்தவேளையில் அவன் அங்கிருந்து 
அகன்று போனாலும் - அதன் பிறகு 
அவன் ஆக்ரோஷம் கொண்டு அனர்த்தங்கள் பல செய்தான்...

அமரர்கள் கூடி முயன்ற போதும் 
அவனுடைய அடாத செயல்கள் தொடர்ந்தன...

தேவர்கள் ஒன்றுகூடி சிவபெருமானைச் சரணடைந்தனர்..

அனைத்துயிர்களின் பொருட்டு ஈசனும்
அந்தகாசுரனுக்கு நீதியை எடுத்துக் கூறினார்..
அகன்று போய்விடுமாறு அறிவுறுத்தினார்..

மாயையால் நிறைந்திருந்த அந்தகாசுரன்
அறிவுரைகளை ஏற்றானில்லை..

ஈசனை எதிர்த்து ஆயுதமேந்தி நின்றான்..

மாறாத புன்னகையுடன் அவனை எதிர்கொண்டார் ஈசன்..

அந்தகாசுரனின் விதி 
எம்பெருமானின் திருக்கரங்களால் முடிவுற்றது...

இந்தத் திருவிளையாடல் 
திருக்கயிலாய மாமலையில்
நிகழ்ந்ததாகும்.. 

ஆனாலும் 
எதையும் ஏற்றுக் கொள்ளாத 
இருள் மனம் கொண்டோர்க்கு
அவர் கொண்ட குணமே கூற்றாகும்
என்பது தலபுராணம் உணர்த்தும் சிறப்பு..
 

திருக்கோவலூர் 
அறுபத்து மூவருள் ஒருவரான
மெய்ப்பொருள் நாயனார் வாழ்ந்த திருத்தலம் ஆகும்..  

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்
மிக உயர்ந்த ஞானநூலாகும்..

திருக்கோவலூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் தான்
ஔவையார் விநாயகர் அகவல் பாடினார்
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. 

நடுநாட்டிலுள்ள சிறப்பான திருத்தலங்களுள் 
திருக்கோவலூரும் ஒன்று...

வள்ளல் பாரியின் மக்களாகிய 
அங்கவை சங்கவை இருவரையும்
மலையமான் திருமுடிக்காரியிடம் 
ஒப்படைத்து விட்டு - குன்று ஒன்றின் மீது
வடக்கிருந்து உயிர் நீத்தார் - பெரும் புலவர் கபிலர் 
என்பது வரலாறு..

திருக்கோவலூரின் அருகில் தான் அந்தக் குன்று உள்ளது 

திருக்கோவலூர் மலையமான் வம்சத்தைச் சேர்ந்த
வானவன் மாதேவியார் மணிவயிற்றில் தான்
மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தான்..

அந்த வகையில் ராஜராஜன் பிறந்த ஊர் 
திருக்கோவலூர் என்று அறியப்படுகின்றது..

திருக்கோவலூர் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும்..

ஒருவர் கிடக்க இருவர் இருக்க மூவர் நிற்க -
எனும் நிலையில் நான்காவதாக ஒருவர் வந்து 
நெருக்கியடித்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்..

இங்குள்ள திரிவிக்ரமப் பெருமாள் திருக்கோயில்
புகழ் பெற்றதாகும்.. 

திருக்கோவலூர் இன்றைய நாளில் 
திருக்கோயிலூர் என்றழைக்கப்படுகின்றது...

- திருப்பதிகம் அருளியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்

படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கனின்றும்
விடகிலா வாதலாலே விகிர்தனை விரும்பி யேத்தும் 
இடையிலே என்செய்கேனோ இரப்பவர் தங்கட் கென்றும்
கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே!..(4/69)  
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம் 


கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ சாரதாம்பிகை - மங்களூர்


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே..(48) 
- அபிராமிபட்டர் - 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

வெள்ளி, டிசம்பர் 30, 2016

மார்கழிப் பூக்கள் 15

தமிழமுதம்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை..(1031) 
***
ஔவையார் அருளிய
நல்வழி

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 15


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் - குணசீலம்..
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற் கரவு..(2134)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

ஐந்தாவது திருத்தலம்
திருப்பறியலூர்



இறைவன் - ஸ்ரீ வீரட்டேஸ்வரர்
அம்பிகை - இளங்கொம்பனையாள், பாலாம்பிகை
தீர்த்தம் - சிவகங்கை தீர்த்தம்
தலவிருட்சம் - பலா

அங்கே தட்க்ஷ பிரஜாபதியின்
அரண்மனையில் ஏகத்துக்கும் ஆரவாரம்..

என்னவென்று விசாரித்தால்,

தேவாதிதேவர்கள் எல்லாரும் கூடி
திருமணம் பேச வந்திருக்கின்றார்களாம்..

யாருக்கு!?..

வேறு யாருக்கு?.. தட்க்ஷனின் திருமகளாக
வளர்ந்து வரும் தாட்க்ஷாயணிக்குத் தான்!..

மணமகன் எந்த நாட்டின் இளவரசன்?..

இளவரசனா?.. சரியாய் போச்சு!..
மணமகன் அரசர்க்கெல்லாம் அரசன்.. பேரரசன்..
ராஜாதிராஜன்!.. தியாகராஜன்!..
திருக்கயிலாய நாதன்!..

தட்க்ஷன் என்ன சொல்கிறார்?...
ஒத்துக் கொண்டு விட்டாரா?.. எப்போது கல்யாணம்!..
கல்யாண வீட்டில் சாப்பிட்டு நாளாகின்றது!..

தற்சமயம் சிவன் சக்தியற்று இருக்கின்றாராம்...
தாட்க்ஷாயணியைக் கல்யாணம் செய்து கொண்டால் தான்
சக்தியை மீண்டும் பெறுவாராம்!..

ஓஹோ!..

அதனால் தேவர்கள் தரப்பில் உடனடியாகக் கல்யாணத்தை
வைத்துக் கொள்ளலாம் என்கின்றார்கள்.. ஆனால்..

என்ன ஆனால்?..

தட்க்ஷன் பிடிவாதமாக இருக்கின்றானாம்!..

எதற்காக!?..

சிவனே சக்தியற்றுக் கிடக்கின்றான்..
அவனுடைய சக்தியே இப்போது என் கையில்!..
நான் என் பெண்ணைக் கொடுத்தால் தான்
சிவனுக்கு சக்தி கிடைக்கும் என்றால்..

என்றால்!..

நான் தானே பெரியவன்!..ஆகையால், 
என்னை வந்து சிவன் பணிய வேண்டும்!..
என்கின்றானாம்!..

அடப்பாவி!..

எல்லாரும் அப்படிச் சொன்னதால்
கல்யாணப் பேச்சு தடைபட்டுப் போயிற்று...

எதுக்கும் கொடுப்பினை வேண்டும்..
கல்யாணம் நின்று போயிற்று..
கல்யாணச் சாப்பாடும் கிடைக்காமல் போயிற்று!..

இப்படித்தான் மக்கள் பேசிக் கொண்டார்கள்..

ஆனால்,
கல்யாணப் பேச்சு நின்றதே தவிர
கல்யாணம் நிற்கவில்லை..

தந்தையின் அகம்பாவத்தைக் கண்ட தாட்க்ஷாயணி
தான் பூஜித்து வந்த சிவலிங்கத்தை
தனது இதய கமலத்துள் நிறுவிக் கொண்டாள்...

அந்த அளவில் தனது சக்தியை மீண்டும் எய்திய
எம்பெருமான் தாட்க்ஷாயணியை சிறையெடுக்க
திருக்கயிலையில் திருக்கல்யாணம் நடந்தேறியது...

அதேசமயம்
தன்னை அவமதித்து விட்டதாக
தட்சனின் தலைக்குள் வெறியேறியது..

அதன் விளைவாக
ஈசனையும் இறைவியையும் புறக்கணித்து விட்டு
மாபெரும் வேள்வியைத் தொடங்கி நடத்தினான்..

இருவருக்கும் பொதுவான முனிவர்கள்
இது தவறு!.. - என்றார்கள்...

அதையெல்லாம் அவன் கேட்கவில்லை..

அம்பிகை கயிலையை விட்டு நீங்கியவளாக
தந்தையின் வேள்விச் சாலைக்குச் சென்று
மகள் என்ற உரிமையுடன் கேட்டாள்..

அம்பிகையை வரவேற்று உபசரிக்காமல்
தகாதனவற்றைச் சொல்லி அவமதித்தான்..
அங்கிருந்து வெளியேற்றினான்...


கோபத்தால் கொதித்திருந்த ஈசனின் திருமேனியிலிருந்து
ஸ்ரீ வீரபத்ரர் தோன்றியருளினார்..

தாட்க்ஷாயணி தன்னுடல் நீத்து
ஸ்ரீ பத்ரகாளியாக வெளிப்பட்டாள்..

அந்த அளவில்
தட்சனின் யாகசாலை அழிக்கப்பட்டது...

யாகத்தில் விருந்துண்பதற்கு வந்திருந்த
தேவர்கள் எல்லாரும் அடித்து நொறுக்கப்பட்டனர்...

உயிர் தப்பியோர் ஓடி ஒளிந்து கொண்டனர்..

ரௌத்ரம் அடங்காத வீரபத்ரர்
தட்சனை எட்டிப் பிடித்து
அவனது தலையை அரிந்தெடுத்து
யாக அக்னிக்குள் போட்டார்..

அது ஈரமற்று இருந்ததால்
உடனடியாகத் தீப்பிடித்து
எரிந்து சாம்பலாகிப் போனது..

முனிவரெல்லாம் ஓடி வந்து
ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமியை சாந்தப்படுத்தினர்..

தட்சனின் பிழைதனைப் பொறுத்து
உயிர்ப்பித்தருள வேண்டினர்...

யாகசாலையில் நடந்த களேபரத்தில்
ஆடு ஒன்று பலியாகிக் கிடந்தது..

ஆட்டின் தலையை எடுத்து
தட்சனின் முண்டத்தில் பொருத்தினார்..

தட்சன் உயிர் பெற்றெழுந்தான்..
வழக்கம் போல மன்னிப்பு கேட்டுக் கொண்டான்..
பணிவுடன் வணங்கி நின்றான்..




ஈசன் - வீரபத்ரர் எனத் திருக்கோலம் கொண்டு
தட்சனின் யாகத்தை அழித்த சம்பவம்
திருமுறைகளில் போற்றப்படுகின்றது..

தன்னை உணராமல் தருக்கித் 
திரிபவர்களுக்கு எல்லாம்
இனிது.. இனிது.. ஆட்டுத்தலையே இனிது!..

இதெல்லாம் நிகழ்ந்தது இமய மலைச்சாரலில் என்றாலும்
திருப்பறியலூரின் தலபுராணம்
மனிதன் ஆணவம் கொள்ளாமல் இருக்க வேண்டியதை
அறிவுறுத்துகின்றது..

திருப்பறியலூருக்கு ஞானசம்பந்தப் பெருமான்
திருப்பதிகம் அருளியுள்ளார்..

இன்றைய நாளில் பரசலூர் என்று வழங்கப்படும் 
இவ்வூர் மயிலாடுதுறையை அடுத்துள்ள 
செம்பொன்னார் கோயிலிலிருந்து
நல்லாடை எனும் ஊருக்குச் செல்லும் சாலையில் உள்ளது

ஸ்ரீ திருஞானசம்பந்தர் 
அருளிய திருக்கடைக்காப்பு

நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறியலூரில்
விரையார் மலர்ச் சோலை வீரட்டானத்தானே!..(1/134)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்




பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
பொலாலி - கர்நாடகா


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை ,மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் மிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே!..(46) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், டிசம்பர் 29, 2016

மார்கழிப் பூக்கள் 14

தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081)
***
ஔவையார் அருளிய
நல்வழி


ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை எனமாட்டார் இசைந்து..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ வைகுந்த பெருமாள்
தூத்துக்குடி
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி..(2102)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

நான்காவது திருத்தலம்
திருவழுவூர்



இறைவன் - ஸ்ரீ வீரட்டேஸ்வரர், கஜசம்ஹார மூர்த்தி
அம்பிகை - ஸ்ரீ பாலகுஜாம்பிகை, இளங்கிளை நாயகி
தீர்த்தம் - பஞ்சமுக தீர்த்தம்
தலவிருட்சம் - தேவதாரு

இறைவன் என்றெல்லாம் வணங்க வேண்டியதில்லை..
ஆதியில் சொல்லப்பட்ட வேள்வி நெறிமுறைகளைப்
பின்பற்றி ஆகுதியில் அவிர் பாகங்களை அளித்தாலே போதும்..
அதற்குரிய பலன்களைத் தருவதற்குத் தேவர்கள்
கடமைப்பட்டவர்கள் என்ற கர்வத்துடன் இருந்தனர் -
தாருகாவனத்து முனிவர்கள்..

தம்முடைய தவநெறி எல்லாம் தத்தமது மனைவியரின்
மனஉறுதியில் இருப்பதாகத் தருக்கிக் கொண்டிருந்தனர்..

இவர்களுடைய சித்தத்தைத் தெளிவு செய்திட
இறைவன் எண்ணம் கொண்டனன்..


ஸ்ரீ பிட்சாடனர்
அதன்படி திசைகளே ஆடைகளாக
திகம்பரத் திருக்கோலத்தில்
பிக்ஷாடன மூர்த்தியாக
தாருகாவனத்திற்குப் புறப்பட்டான்..

ஈசனின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்ட
ஸ்ரீ ஹரிபரந்தாமனும் அழகெல்லாம் ஒன்றாகிய
மோகினியின் வடிவாகி ஈசனைத் தொடர்ந்தனன்..

தாருகாவனத்தில் அப்படியும் இப்படியுமாக
நடைபயின்ற திகம்பரனைக் கண்ட
ரிஷி பத்தினியர் சித்தம் கலங்கி செய்வதறியாது திகைத்து
மனம் தாளாமல் மயக்குற்று வீழ்ந்தனர்..

அங்கே - யாகசாலையின் ஒரு ஓரமாக
மோகினி சற்றே நடை பயின்றனள்..

ஒருக்களித்து நின்று ஓரக்கண்ணால் நோக்கினள்..

இப்படியோர் அழகு... இதுவரைக் காணாத அதிசயம்!..
ரிஷிகளின் உள்ளமும் உடலும் ஒருங்கே துடித்தன..

அவர்தம் மனங்களில் மூண்டெழுந்தது காமத் தீ!..
அந்த அளவில் அவிந்து போனது யாகத் தீ!..

இக்கட்டான இவ்வேளையில்
தன்னைத் தொடர்ந்த ரிஷி பத்தினிகளுடன்
திகம்பரன் யாக சாலைக்கு வந்தனன்...

தம் மனைவியரின் அலங்கோலத்தைக் கண்ட
தவ முனிவர்கள் அதிர்ந்தனர்..
தலையில் அடித்துக் கொண்டனர்..
வாழ்வு நெறி இப்படிப் பாழானதே!.. என்று..

காமத் தீயினை மூட்டிக் கருத்தழியச் செய்த
மோகினியைக் கடுங்கோபத்துடன்  தேடினர்..

தாம் வந்த காரியம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன்
சிவ காமேஸ்வரனும் ஜகன் மோகினியும்
திருக்கரங்களைக் கோர்த்தவாறு
தொலைவில் சென்று கொண்டிருந்தனர்...


பிக்ஷாடனரின் முன்பாக ஐயனார்
சிவகாமேஸ்வர - ஜகன்மோகினி
சங்கமத்தினால்
ஸ்ரீ சாத்தன் என்று போற்றப்படும் 
ஸ்ரீ ஹரிஹர சுதனின் திருஅவதாரம் நிகழ்ந்த தலம்
திருவழுவூர் என்பது தலபுராணம்.. 

தங்களது தவம் கெட்டதற்கு தமது மனைவியரின்
மனம் கெட்டது தான் காரணம்..

அதற்குக் காரணன் ஆடையில்லாமல் வந்த திகம்பரன்..
அவனை அழித்தே தீர்வது என - கங்கணம் கட்டிக் கொண்டனர்..

ஆத்திரத்துடன் அபிசார வேள்வியைச் செய்தனர்..

அதில் தோன்றிய - அக்னி, பாம்பு, உடுக்கை, புலி, சிங்கம்
இவற்றையெல்லாம் திகம்பரனை நோக்கி ஏவினர்..

அக்னி, பாம்பு, உடுக்கையெல்லாம் ஈசனுடன் ஒன்றிவிட்டன..
புலியும் சிங்கமும் இறைவன் திருக்கரத்தால் கீறிக் கிழிபட்டுப் போயின...

கடுப்பாகி விட்ட கடுமனத்தோர் யாகத் தீயில் இருந்து
கரிய யானை ஒன்றினைத் தோற்றுவித்து ஏவினர்..

அண்டங்களெல்லாம் அதிரும்படிக்கு ஓடிவந்த யானை
ஈசனைத் தன் துதிக்கையால் சுற்றி வளைத்துத் தூக்கியது..

அண்டங்களைப் படைத்த ஐயன் அணுவிற்கும் அணுவாகி
ஆனையின் வயிற்றுக்குள் புகுந்தார்..

புகுந்ததுடன் மட்டுமல்லாமல் 
வயிற்றுக்குள் அக்னியாக மூண்டெழுந்தார்..

அக்னியின் வெம்மையைத் தாங்க இயலாத வேழம்
கதறிக் கண்ணீர் வடித்தவாறு ஆங்கிருந்த குளத்தினுள் வீழ்ந்தது..

ஆனையின் வயிற்றுக்குள் ஈசன் புகுந்ததும்
வையகமுழுதும் இருண்டு போனது..

இந்தக் கோரத்தைச் சகித்துக் கொள்ள இயலாத பராசக்தி
பால முருகனைத் தன் இடுப்பில் சுமந்தவாறு
அஞ்சி நடுங்கினாள்!..




அவ்வேளையில் ஆனையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு
யானையின் தோலை ஆடையாகத் தரித்த வண்ணம்
எம்பெருமான் புன்னகையுடன் வெளிப்பட்டருளினன்...

இந்த நிகழ்வு தேவாரம் முழுதும் போற்றப்படுகின்றது..

இந்த நிகழ்வினை அப்பர் பெருமான் 
பாடும் அழகே அழகு!..
  
விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால வயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒந்திருமணிவாய் விள்ள
சிரித்து அருள்செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!..

இத்தலத்திற்கு அருளப்பெற்ற திருப்பதிகம்
எவையும் கிடைத்தில...

ஆயினும், அப்பர் பெருமான் அருளிய
திருவூர் பதிகத்தினுள் வழுவூர் வீரட்டம் காணப்படுகின்றது..

எனவே, தேவார வைப்புத் தலம் என விளங்குகின்றது..

மயிலாடுதுறை திருவாரூர் வழித்தடத்தில்
மங்கநல்லூருக்கு அருகாமையில் 
வழுவூர் உள்ளது
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
குயில் பத்து




சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவுவாய்.. 
***

தேவி தரிசனம்

ஸ்ரீ சாரதாம்பிகை
சிருங்கேரி




வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.. (46)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

புதன், டிசம்பர் 28, 2016

மார்கழிப் பூக்கள் 13

தமிழமுதம்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு..(396)
***
ஔவையார் அருளிய
மூதுரை

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்..
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்த்துக் கலந்தேலோர் எம்பாவாய்!..

உதயத்திற்கு முன்பு பிரகாசமாக விடிவெள்ளி
விடிவெள்ளி எனப்படும் வெள்ளி (Venus) விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே வானில் தோன்றிவிடும்..
இவ்வேளையில் சூரியனுக்கு நேர் எதிரே வியாழன் (Jupiter) மறையும்..

இந்நிகழ்வு மார்கழியில் சமச்சீராக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்..

இதையே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
திருப்பாடலில் குறித்தருள்கின்றனள்.. 
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ பார்த்தசாரதி - திருஅல்லிக்கேணி
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்நெஞ்சே என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு..(2122)

ஓம் ஹரி ஓம் 
***

சொல்லின் செல்வனாகிய
அஞ்சனை மைந்தன்
ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் 
திருஅவதாரத் திருநாள் - இன்று..



புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ரம்மசாரினம்
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹே

ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்ர நமோஸ்துதே

அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர்க் குலத்துதித்த சிலையணி ராமதூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பருக்கென்றும்
அஞ்சல் என்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே!..

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!..
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

மூன்றாவது திருத்தலம்
திருஅதிகை


இறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர், திரிபுராந்தகர்
அம்பிகை - ஸ்ரீ பெரியநாயகி, திரிபுரசுந்தரி 
தீர்த்தம் - சூலகங்கை, கெடில நதி.
தலவிருட்சம் - சரக்கொன்றை

ஆணவத்தால் அசுரர்கள் அழிந்த மற்றுமொரு சம்பவம்
திருஅதிகைப் பதியில் நிகழ்ந்தது..

வித்யுந்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் எனும் மூவரும்
இறைவனை நோக்கித் தவமிருந்து
பொன்,வெள்ளி மற்றும் இரும்பு எனும் அரண்களைப் பெற்றனர்..

நினைத்த இடத்திற்கு அந்த அரண்களுடன் பறந்து 
செல்வதற்கு அவர்களால் இயலும்..

தகுதிக்கு மீறிய வரம் அவர்களுக்குக் கிடைத்ததால்
அவர்களால் ஓரிடத்தில் சும்மா இருக்க முடியவில்லை..

பல பகுதிகளுக்கும் பறந்து சென்று 
பற்பல அழிவுகளை உண்டாக்கினர்..

இவர்களை அழிக்க வேண்டி நின்றனர் தேவர்கள்..

அதற்கு இசைந்த ஈசன் - தேவதச்சனை நோக்கி
மகாரதம் ஒன்றினை உருவாக்குமாறு
ஆக்ஞையிட்டார்..

அதன்படி உருவாக்கப்பெற்ற தேரின் 
சகல பாகங்களிலும் தேவர்கள் கலந்து நின்றனர்..

இறைவன் அத்தேரில் எழுந்தருளும் போது
தேரின் பாகங்களாக இணைந்திருந்த தேவர்கள் 
ஒவ்வொருவரின் மனங்களிலும்
நம்மால் தான் இக்காரியம் நிகழயிருக்கின்றது!..
எனும் ஆணவம் தோன்றியது..

அதனை உணர்ந்த எம்பெருமானின் திருமுகத்தில் 
புன்னகை மலர்ந்தது...

அந்த அளவில் மகாரதம் இற்று வீழ்ந்து 
பொடியாகிப் போனது..

ஈசனின் இளநகையில் தோன்றிய தீப்பொறியினால்
மூன்று அசுரர்களும் அவர்களுடைய அரண்களோடு 
சாம்பலாகிப் போயினர்...


அவ்வேளையில் 
ஸ்ரீஹரிபரந்தாமன் நந்தியம்பெருமானாக 
உருமாறி ஈசனைத் தாங்கி நின்றார்..

ஹரிபரந்தாமனின் இத்திருக்கோலமே
மால்விடை எனப் புகழப்படுவது...

ஐயனுக்காக அமைந்த மகாரதம் 
இற்றுப் பொடியாக வீழ்ந்ததற்குக் காரணம்
விநாயகப் பெருமான்!.. என்றொரு வழக்குண்டு..

அதனை வலியுறுத்துபவர் அருணகிரிநாதர்...

அசுரர்களை ஈசன் அழிக்கவில்லை.. 
அவர்களுக்கு அருளே புரிந்தனன்!.. -
என்பதாக உரைப்பவர் ஞானசம்பந்தப் பெருமான்..

ஆணவம் அழிந்த நிலையில் அசுரர்கள் மூவரும்
திருக்கயிலையில் காவற்பணியில் இருக்கின்றனர்!..
என்று மொழிபவர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

இந்நிலையில் திருமூலர்
கூறியருள்வது - இவ்வாறு..

அப்பணி செஞ்சடை ஆதிபுராணன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே!..
- திருமந்திரம் -



திருவாமூர் எனும் திருவூரில் புகழனார் மாதினியார் தம்பதியர்க்குத் தோன்றிய மக்களே திலகவதி மற்றும் மருள்நீக்கியார்..

விதிவலியால் திலகவதிக்கு
நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீரசுவர்க்கம் அடைந்தார்..
அதிர்ச்சியில் தாய் தந்தையர் விண்ணுலகம் புகுந்தனர்..

தாய் தந்தையரை இழந்து நின்ற திலகவதியார்
மாறாச் சோகத்தினால் தம்பியையும் பிரிந்தார்...

திலகவதியார் நோன்புக் கோலம் நோற்று
சிவப்பணி செய்த திருத்தலம்
திருவதிகை..

சமணம் சென்றடைந்த மருள்நீக்கியார்
மனம் திருந்தி சைவத்தைச் சரணடைந்தது
இங்குதான்..

அவருக்குள் விளைந்திருந்த சூலை நோய் தீர்ந்தது
திருவதிகையில் தான்!..

மருள் நீக்கியார் மனம் உவந்து ஈசன் எம்பெருமானை வேண்டி
முதல் பாடல் பாடியது திருவதிகையில் தான்!..

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே!.. (4/1)

மருள்நீக்கியாரின் பாடலைக் கேட்டு 
மனமகிழ்ந்த ஈசன் அவருக்கு
திருநாவுக்கரசர்!.. 
- எனத் திருப்பெயர் சூட்டியது இங்குதான்!..

சைவ சமயாச்சார்யர்கள் முதல் மூவருள் மூத்தவராகிய
திருநாவுக்கரசரின் திருப்பாடல்களே தேவாரம் என்பன..

- திருப்பதிகம் அருளியோர் - 
திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், 
சுந்தரர்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்


எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி!.. (6/5)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
குயிற்பத்து


நீல உருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் றிகழும் கொடிமங்கை உள்ளுறைக் கோயில்
சீலம் பெரிதும் இனியதிரு உத்தர கோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக்கூவுவாய்!..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ திரிபுர சுந்தரி


பரிபுரச் சீரடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே..(043)
- அபிராமிபட்டர் -

மார்கழிப் பதிவுகளுக்கான திருத்தலங்களையும்
திருப்பாடல்களையும் முன்பே குறித்து வைத்திருக்கின்றேன்..

ஆனால், இதற்கு இது என்று இணைத்து வைக்கவில்லை..
  
இன்றைய திருத்தலமான திருவதிகையைக் குறித்து
தகவல்களைப் பதிவு செய்து கொண்டிருந்த பொழுதில்

மேற்குறித்த திருப்பாடலை
அம்பிகை அவளே இணைத்தாள்..

இத்திருப்பாடலில் திரிபுர சம்ஹாரத்தின் போது
ஈசனுடன் அம்பிகையும் உடனிருந்ததை
அபிராமிபட்டர் சொல்கின்றார்..

அம்பிகை அவளருள் ஏதென்று சொல்லுவதே!.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***