நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 09, 2017

மார்கழிப் பூக்கள் 25

தமிழமுதம்

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்..(085)
***

சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- நட்பிற் பிழை பொறுத்தல் -

நல்லாரெனத் தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லாரெனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு..(221)  
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர்தன்னை மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்..(2232)

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்

ஏழாவது திருத்தலம்
பிரம்ஹரந்த்ரம்

திருமறைக்காடு

மறைக்காட்டு மணாளன்
இறைவன்
மறைக்காட்டு மணாளன்
வேதவன நாதன்
வேதாரண்யேஸ்வரர்

அம்பிகை
பண்ணின் நேர் மொழியாள்
யாழைப் பழித்த மொழியாள்
வேதநாயகி

தீர்த்தம் - வேத தீர்த்தம், மணிகர்ணிகை
தலவிருட்சம் - வன்னி

புவனி விடங்கர் - ஹம்ச நடனம்
அன்ன நடை போலும் நடனம்..

அகத்திய மாமுனிவருக்குத் திருமணக் கோலம்
காட்டியருளிய திருத்தலம்...

கருவறையினுள் - சிவலிங்கத்திற்குப் பின்புறமாக
அம்மையப்பனின் கல்யாணத் திருக்கோலம் திகழ்கின்றது..

நான்கு வேதங்களும் வழிபட்டதாக ஐதீகம்...

நன்றி - வேதாரண்யம் வேங்கட சுப்ரமணியன்..

திருக்கோயில் தீபத்தினுள்
நெய் உண்ணுதற்கு வந்த எலி - தனது
புண்ணிய பலத்தால் மாவலி மன்னனாகப்
பிறந்து உய்வடைந்தது...


நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்கு சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகமெல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே!..

என்று - அப்பர் பெருமான் குறித்தருள்கின்றார்..

ஸ்ரீ ராமர் பாதம் - கோடியக்கரை
ஸ்ரீ ராமபிரான் சீதையைத் தேடிக் கொண்டு
தெற்கு நோக்கி வந்தபோது இத்தலத்தில்
சிவ வழிபாடு செய்ததாக புராணம்...

ஸ்ரீ ராமபிரான்
கோடியக்கரையில் நின்று தெற்கே நோக்கியதால்
ஆதி சேது எனவும் வழங்கப்படுகின்றது..

அப்பர் பெருமானும் ஞானசம்பந்த மூர்த்தியும்
திருமடம் கொண்டு தங்கியிருந்த
திருத்தலங்களுள்
திருமறைக்காடும் ஒன்று..

வேதங்களால் திருக்கதவங்கள் அடைக்கப்பட்டதால்
அவற்றைத் திறக்கும் வழியறியாதிருந்தனர் மக்கள்..



அந்தத் திருக்கதவுகளை
செந்தமிழ் பாடி அப்பர் பெருமான் திறந்தும்
மீண்டும் அவற்றை
ஞானசம்பந்தர் தாழிட்டும்
மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக்கினர்..

திருமறைக்காட்டில் இருக்கும்போது தான்
மதுரையம்பதியில் மீண்டும் சைவ சமயத்தை
நிலைநாட்டுதற்கு வருமாறு
ஞானசம்பந்தப் பெருமான் அழைக்கப்பட்டார்..

அதற்கிணங்கி ஞானசம்பந்தப் பெருமான்
புறப்படும் வேளையில்,
நாளும் கோளும் இப்போது சரியில்லையே!..
என - பதற்றத்துடன் எடுத்துரைத்தார் அப்பர் பெருமான்..

அப்பர் ஸ்வாமிகளுக்கு ஆறுதல் கூறும் வகையில்
ஞானசம்பந்தப் பெருமான் பாடியருளியதே
கோளறு திருப்பதிகம்..

ஆயினும்,
மதுரையம்பதியில் ஞானசம்பந்தப் பெருமானுக்கு
பற்பல இன்னல்கள் ஏற்பட்டன
என்பது திருக்குறிப்பு..


மணிகர்ணிகா தீர்த்தம்
திருக்கோயிலினுள்
மேற்கு நோக்கிய வண்ணம் 
வீரஹத்தி விநாயகர் திருக்கோயில்..
விநாயகருக்கென்று தனி கொடி மரம் விளங்குகின்றது..


ஸ்ரீ அஷ்டபுஜ துர்கா - திருமறைக்காடு
எழிலார்ந்த வடிவினளாக
எட்டுத் திருத்தோள்களுடன்
தெற்கு நோக்கி விளங்கும் ஸ்ரீ துர்காம்பிகை
சிறப்புக்குரியவள்...

திருமறைக்காட்டிலும்
நவகோள்கள் அனைத்தும் 
ஆளுக்கொருதிசை என்றில்லாமல்
வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர்..

ஆடி அமாவாசை, மஹாளயம், தை அமாவாசை நாட்களில்
பிதுர் காரியங்களை நிறைவேற்ற உகந்த தலம் இது..

இந்நாளில் இத்தலம்
வேதாரண்யம் என்று வழங்கப்படுகின்றது..

திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரணியம் வரைக்கும்
இருந்த இருப்புப் பாதை வசதியை
25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒழித்துக் கட்டி விட்டார்கள்..

ஆயினும்,
வேதாரணியத்திற்கு தமிழகத்தின் அனைத்து 
பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது..



வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 
அகஸ்தியன் பள்ளி சிவாலயம்..
கடலோரத்தில் கோடியக்கரை குழகர் திருக்கோயில்..

கோடியக்கரை சரணாலயம் சிறப்பான சுற்றுலா தலம்..

என் தந்தை எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லிய
திருத்தலம் - வேதாரணியம்..

- திருப்பதிகம் அருளியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..

ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிய தேவாரம்


தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே!..(6/23) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
15 - 16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தான்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!..

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொலிவாய் மழையேலோர் எம்பாவாய்!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ அஞ்சு வட்டத்தம்மன் - கீழ்வேளூர்



பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

4 கருத்துகள்:

  1. வேதாரண்யம் பற்றிய தகவல்களும் அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பக்திமணம் நனி சொட்டச்சொட்ட அருமையான விஷயங்களைத் தருகிறீர்கள். மனதுக்கு நிம்மதி விளைகிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  3. வேதாரண்யம் பற்றிய தொகுப்பினை தெரிந்து கொண்டேன் சார்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..