நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 30, 2017

மதுரைக்கு வாங்க.. 2

வாத்யாரே!..

பசங்களா!.. வாங்க.. வாங்க!..

சும்மா இப்படியே வந்தோம்!.. இவன் தான் சொன்னான்.. இன்னைக்கும் போய் திருவிழா படம் எல்லாம் பார்ப்போம்.. ந்னு!..

அதுக்கென்ன.. பார்த்துட்டா போச்சு!..

வாத்யாரே.. எனக்கு ஒரு சந்தேகம்!...

போன வருஷம் மாரியம்மன் கோயில்...ல கூழு காய்ச்சி ஊத்துன அன்னைக்கு திருவிளையாடல்..ன்னு ஒரு சினிமா போட்டாங்களே.. அந்துல வர்ற மதுரையும் நீங்க சொல்ற மதுரையும் ஒரே ஊரா?..


ஆமாம்... அந்த மதுரை தான் இந்த மதுரை!..

அப்போ அந்தக் கதையெல்லாம் நெஜமாவே நடந்ததா.. வாத்யாரே!...

ஆமா!... நடந்தது தான்!..

அதுல கூட ஒருத்தர்.. ஆயிரம் பொன்.. ஆயிரம் பொன்.. அப்படின்னு.. அவர் பேர் என்னடா?...

நாகேஷூ!...

நெஜமாவே அந்த மாதிரி ஒருத்தர் இருந்தாரா?...

அப்படித்தான் திருவிளையாடல் புராணம் சொல்றது...

அப்போ அந்தக் காலத்திலயும் எங்கள மாதிரி ஏழைங்க இருந்தாங்களா!...

இருந்தாங்க.. அதுக்கு பல காரணங்கள்!...

ராஜா கிட்ட பரிசு வாங்குறப்ப சிவன் வந்து அந்த சாமியாரை பொசுக்கிடுறாரே!.. அதெல்லாம் உண்மையா!.. வாத்யாரே?..

அதையெல்லாம் விளக்கமா சொல்றதுக்குள்ளே திருவிழாவே முடிஞ்சுடும்...

கொஞ்சமா சொல்லுங்களேன்..

சரி.. அந்தக் கதையில பணக்கஷ்டம் உள்ளவரா வர்றவர் பேர் தருமி... ஆதரவு யாரும் அவருக்குக் கிடையாது.. ஆனாலும் அவர் குடும்பஸ்தரா ஆகணும்.. அப்போ தான் கோயில் வேலை கிடைக்கும்.. காசு பணம் இல்லாத அவருக்கு யாரும் பொண்ணு கொடுக்கலே...

அந்தக் காலத்திலயும் ஏழை ஜனங்க இப்படித் தான் இருந்திருக்கு!...

பணத்துக்காக கஷ்டப்பட்டார் தருமி.. அப்போ தான் செண்பகப் பாண்டிய ராஜாவுக்கு ஒரு சந்தேகம் வருது... பெண்களோட கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் இருக்குதா.. இல்லையா.. அந்த் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறவங்களுக்கு ஆயிரம் பொன்.. அப்படின்னு தண்டோரா போட்டார்...

ராஜாவுக்கு வேற வேலை இல்லை போல இருக்கு... ஜனங்களோட பிரச்னையை யோசிக்காம எதுக்கு போய் யோசிச்சி இருக்கார் பாரேன்!..

அந்தக் காலத்தில உண்மையிலயே பிரச்னை இல்லாம தான் இருந்தது... ஆறு குளத்தை அழிக்கவில்லை.. மலையை வெட்டி ஏற்றுமதி செய்யவில்லை.. மரம் மட்டைகளை வெட்டிச் சாய்க்கவில்லை.. மொத்தத்தில் ஊரை அடித்து உலையில் போடவில்லை...

மக்களும் நிம்மதியா இருந்தாங்க.. மகாராஜாவும் நிம்மதியா இருந்தார்.. இல்லையா!.. வாத்யாரே!...

அதே தாண்டா.. பசங்களா... இந்த நேரத்தில தான் - ராஜாவுக்குச் சந்தேகம்.. ராணியின் கூந்தல்ல வாசம் இயற்கையா செயற்கையா!.. அப்படின்னு!... தீர்த்து வைக்கிறவங்களுக்கு ஆயிரம் பொற்காசு..ன்னு தண்டோராவும் போட்டாச்சு...

.....!.. .....!.. .....!..

இந்த சேதியை தருமி கேட்டார்.. அவருக்கு அரசனோட சந்தேகத்தைத் தீர்த்து வெச்சுட்டு ஆயிரம் பொன் பரிசை வாங்கிடுவது.. ந்னு தணியாத ஆசை..
அந்த நேரத்தில தான்!...

அந்த நேரத்தில..

மீதியை நாளைக்குச் சொல்றேன்.. இப்போ வாங்க திருவிழா படங்களைப் பார்க்கலாம்...

சரிங்க.. வாத்யாரே!..

வழக்கம் போல படங்களை எல்லாம் குணா முதன், ஸ்டாலின் , அருண் - அனுப்பியிருக்காங்க!.. அவர்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி..

29/4 சனிக்கிழமை
இரண்டாம் திருநாள்
-: பகல் :-




-: இரவு :-
சுந்தரேசர் பூத வாகனத்திலும்
கயற்கண்ணி அன்ன வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்..















விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடி செய்தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத்தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக் கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி இருந்தான் தன்னைத்
தெண்ணிலவு தென்கூடல் திருஆல வாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!.. (6/19)
-: திருநாவுக்கரசர் :-

மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, ஏப்ரல் 29, 2017

மதுரைக்கு வாங்க.. 1

வாத்யாரே!...

டேய்.. பசங்களா!.. எங்கேடா உங்களை இத்தனை நாளா காணோம்?..

நாங்கள்..லாம் வேலை பார்க்கப் போயிருந்தோம்..ல!..

என்னது.. வேலைக்குப் போயிருந்தீர்களா!..

ஆமா.. வாத்யாரே!.. சும்மா ஊரைச் சுத்தி வந்தா துட்டு கெடைக்க மாட்டேங்குது.. அதால... வேலை கிடைக்கிற ஊராப் பார்த்து பொழைக்கப் போனோம்!..

பசங்களா... உங்களுக்கும் அறிவு வந்துடுத்தா?.. அது சரி..
நம்ம ஊர்ல வேலை இல்லேன்னா.. அசலூர் வேலைக்குப் போனீங்க!..

என்னா வாத்யாரே.... ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கிறீங்க!..
இங்கே தான் வயக்காடு கொல்லைக்காடு.. இங்கெல்லாம்
சீமைக் கருவையை வளர்த்து தரிசாப் போட்டுட்டு அப்புறமா மனைக்கட்டு...ன்னு வித்து காசாக்கிட்டாங்களே...

கடலைக் காய் புடுங்கக் கூட கொல்லைக்காடு இல்லாமப் போச்சு..
நாங்க செலவுக்கு என்னா பண்றதாம்!.. அப்பன் ஆத்தாக்கிட்டே கேட்டா ஒதைக்க வர்றாங்க!..

சரி.. அதுக்காக.. எந்த ஊருக்குப் போய் உழைச்சீங்க!...

அதெல்லாம் கேக்காதீங்க.. வாத்யாரே.. இப்ப எங்க கையில ஆளுக்கு ஏழாயிரம் எட்டாயிரம் ..ன்னு இருக்கு...

அடே.. பரவாயில்லையே!.. நல்லாருங்க.. நல்லாருங்க!...

இப்ப எங்கே போய்க்கிட்டு இருக்கோம் தெரியுமா?...

தெரியாதே?..

நகைக் கடைக்கு!.. ஆளாளுக்கு ஒரு மோதிரம் வாங்கப் போறோம்!..

சரி.. வாங்குங்க!.. ஆனா.. இன்னைக்கு ஏன் வாங்கணும்?..

இன்னிக்குத் தானே அச்சய திரி!..

அது அச்சய திரி இல்லை.. அக்ஷய திரிதியை!..

சரி.. ஏதோ ஒன்னு!... நாங்க சீக்கிரம் போவனும்... இப்பவே கூட்டம் அங்கே அடிச்சிக்கிட்டு நிக்குதாம்!... இன்னைக்கு தங்கம் வாங்கினா வருசம் பூரா வாங்கலாமாம்...

டேய்.. பசங்களா... நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா!..

சொல்லுங்க வாத்யாரே... உங்க பேச்சை என்னைக்காவது தட்டியிருக்கோமா?.. 

சரி.. அப்ப.. கேளுங்க... அக்ஷய திரிதியை அன்னைக்கு நகை வாங்கனும்..ன்னு எந்த சாஸ்த்ரத்திலயும் சொல்லலையாம்..

ஆனா,  விளம்பரம் எல்லாம் அப்படித் தானே சொல்றாங்க!..

அது உங்க கிட்ட இருக்கிற காசு பணத்தைக் கறக்கறதுக்கு!..

அப்புறம்?..

இந்த அக்ஷய திரிதியை அன்னிக்கு தான தர்மம் செய்றதும் கோயிலுக்குப் போறதும் இல்லாதவங்களுக்கு உதவுறதும் தான் நல்லது - அப்படின்னு பெரியவங்க சொல்றாங்க!...

அப்படி..ன்னா இன்னிக்கு நகை வாங்குறவங்க எல்லாம் முட்டாளுங்களா!..

இன்னிக்கு உங்கிட்ட இருக்கிற தங்கத்தை கொண்டு போய் நகைக் கடையில விற்க முடியுமா....ன்னு பாருங்க!..

.......? .......? ......?..

நகை வாங்குறது நல்லது...ன்னு சொல்ற கடைக்காரன் உங்கிட்ட இருந்து வாங்கிக்க மாட்டான்.. அவங்கிட்ட இருக்கிறதை விக்கிறது தான் நோக்கமே!.. இப்ப புரியுதா!...

இப்ப என்ன வாத்யாரே.. செய்யிறது?..

மனசுக்கு சந்தோஷமா சாப்பிடுங்க... கோயிலுக்குப் போங்க... யாராவது ஏழைக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்க.. இஷ்டம்..ன்னா சட்டை துணிமணி எடுத்துக்குங்க.... இதெல்லாம் கஷ்டம்..ன்னா பிள்ளையார் கோயில் தோப்புல தென்னை மரத்துக்கு ரெண்டு குடம் தண்ணி தூக்கி ஊத்துங்க!..

வாத்யாரே... நல்லது சொன்னீங்க.. சரி.. நீங்களும் வாங்க.. போய் டிபன் சாப்பிட்டு வருவோம்...

டேய்.. நான் எதுக்குடா?.. நீங்க போய்ட்டு வாங்க!..

வாத்யாரே... நீங்க சொல்றதை நாங்க கேக்குறோம்..ல... அதே மாதிரி நாங்க சொல்றதையும் நீங்க கேளுங்களேன்.. அப்ப தானே எங்களுக்கும் சந்தோஷம்!..

சரி.. உழைச்ச காசு..ல உங்க அப்பா அம்மாவுக்கு என்னடா செஞ்சீங்க!...

வீட்டுக்கு மளிகைச் சாமான் வாங்கிப் போட்டோம்... கைச் செலவுக்குக் காசு கொடுத்தோம்.. எங்க அப்பா கட்டிப் புடிச்சி ஆனந்தக் கண்ணீர் விட்டார்...

இருக்காதா பின்னே!..

சரி.. சரி.. நீங்க கிளம்புங்க!..

இருங்கடா பசங்களா.. இந்த கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டு வர்றேன்...

வாத்யாரே.. அதென்ன... ஏதோ திருவிழா மாதிரி... பொண்ணுங்க...ல்லாம் கோலாட்டம் ஆடுதுங்க!..


இதுவா... இது மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல சித்திரைத் திருவிழா... நேத்து கொடியேற்றம் ஆகியிருக்கு.... பத்து நாளைக்கு ஜகஜ்ஜோதியா இருக்கும்... மீனாட்சி கல்யாணம்... அப்புறம் தேர்... அப்புறம் அழகர் ஆற்றுல இறங்குவார்... லட்சக் கணக்குல ஜனங்க கூடுவாங்க.. தமிழ் நாட்டுல பெரிய திருவிழா அது!...

அப்படியா.. நமக்கு இதெல்லாம் தெரியாம போச்சே.. எங்கே அந்தப் போட்டோ எல்லாம் காட்டுங்க!.. பார்ப்போம்!..

ம்ம்.. பாருங்க!..

28/4 வெள்ளிக்கிழமை காலை
திருக்கொடியேற்றம்






28/4 வெள்ளிக்கிழமை
முதலாம் திருநாள்

-: இரவு :-
சுந்தரேசர் கற்பக விமானத்திலும்
அங்கயற்கண்ணி சிம்ம வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்..









வாத்யாரே!... இந்த போட்டோ எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?...

குணா அமுதன், ஸ்டாலின், அருண் .. அப்படி..ன்னு நமக்கு வேண்டியவங்க!.. அழகா படம் எடுத்து அனுப்புனாங்களே.. அதுக்கு நன்றி சொல்லணும்...

வாத்யாரே!... இந்த சாமி படத்தில ரெண்டு கொடுங்களேன்!..

ஓ.. தாராளமா... உங்களுக்கு இல்லாததா!..

மீனாட்சியம்மா கண்ணுக்குள்ள நிக்கிறா.. வாத்யாரே!...


அவள் தான்.. இந்த உலகத்துக்கே தாய்..
அவள் தான்.. மக்களப் பெத்த மகராசி!.. 
அவள் தான்.. உண்மையிலயே தங்கம்..
அவள் தான்.. படியளக்கிற பரமேஸ்வரி!..

நம்மைத் தேடி வரும் தங்கம் அவள் தானடா!..
இந்தத் தங்கம் இருக்கிறப்ப வேற தங்கம் எதுக்குடா!..
***

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ 
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ 
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!..(6/95)
- திருநாவுக்கரசர் - 

மீனாக்ஷி சுந்தரேசர் திருவடிகள் போற்றி..
ஓம் நம் சிவாய சிவாய நம ஓம்!.. 
***

புதன், ஏப்ரல் 26, 2017

பதிவுக்குள் பதிவு..

அண்ணே!.. அண்ணே!..

தம்பி!.. வாங்க.. எப்படியிருக்கீங்க?..

எங்கே..ண்ணே!.. ஒரு வாரமா குளிரும் மழையும் புரட்டி எடுத்துடிச்சி.. அது சரி.. உங்களுக்கும் உடம்பு சரியில்லை.. ந்னு கேள்விப்பட்டேன்!..

என்னப்பா.. செய்றது.. நானும் இருக்கேன்... னு, எதிர்பாராத விருந்தாளியா  தலைவலி, ஜூரம்...

இத்தனை வருஷமா ஐயப்ப விரதம்.. ன்னு ஒவ்வொரு நாளும் இரண்டு தரம் குளியல்... அப்போதெல்லாம் வராத ஜூரம் இப்போது!..

ஆனாலும் - காய்ச்சல் போவதும் வருவதுமாக மிகுந்த சிரமமாகி விட்டது...

ஏன்.. ண்ணே!.. ஓய்வு எடுத்து இருக்கலாம்..ல்லே!..

ஓய்வா?.. சரியாப் போச்சு.. போ!.. ஜனவரி பதினைஞ்சில இருந்து தினமும் கூடுதலாக நாலு மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்...

8 + 4 + 2 ..ன்னு பதினாலு மணி நேரம்.. மீதமுள்ள நேரத்தில் தான் வலைத் தளம், உணவு, உறக்கம்...

அடடா?..

அதுக்கு இடையில தான்.. தலைவலி, ஜூரம்..
ஓய்வு நாள் இல்லாம எல்லா நாளும் வேலை.. ன்னு அறுபது நாள்...
கூடுதலான நாலு மணி நேர வேலை போன வாரம் தான் என்னை விட்டது.. 

என்னமோ.. அண்ணே!.. ஊரு விட்டு ஊரு போனாலே -  நாம தான் நம்மை நல்லபடியா பார்த்துக்கணும்.. அதிலயும் நாம கடல் கடந்து வந்திருக்கோம்!.. அது சரி.. நீங்க என்ன சினிமா பொட்டியை...

ஏ.. இது சினிமா பொட்டியில்லை!.. கம்ப்யூட்டர்.. தமிழ்..ல கணினி!..

இருக்கட்டுமே.. கம்பியூட்டர்..ல.. சினிமாவும் பார்க்கிறீங்கதானே!.. அதுக்குள்ள என்ன குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?..

அதுவா!.. நம்ம மனசு குமார் தெரியுமா?..

அங்கே அபுதாபி..ல இருக்காரே.. நீங்க கூட சொல்லுவீங்களே... இந்த வயக்காட்டு கதையெல்லாம் எழுதுவாருன்னு!..

வயக்காடு மட்டுமா!.. குடும்பம்.. அரசியல்.. இலக்கியம்.. சினிமா..ன்னு நாலா பக்கமும் சலங்கை கட்டி ஆடுறவராச்சே!... அவரு கேட்டிருந்தார்... 

என்னைப் பற்றி நான்!.. - ன்ற தலைப்பு..ல நீங்க உங்களைப் பற்றி எழுதுங்க ஐயா..ன்னு!.. அது ஆச்சு.. மூனு மாசம்..

அப்போ இதுவரைக்கும் எழுதிக் கொடுக்கவே இல்லையா?.. இத்தனை நாள் என்ன..ண்ணே செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?..

என்னப்பா.. இது!.. விடிய விடிய கதை கேட்டமாதிரி ஆயிடுச்சு?.. இப்ப தானே பிரச்னையை சொன்னேன்!..

ஆமா..மா!.. குழம்பிட்டேன்!.. அது இருக்கட்டும்... அவங்க கேட்டதுக்கு என்ன.. ண்ணே எழுதப் போறீங்க?..

அது தான்..யா குழப்பமா இருக்கு!.. அந்த அளவுக்கு நம்ம கிட்ட விஷயம் இருக்கா..ன்னு!..

உங்களுக்கும் குழப்பமா!.. அண்ணே உங்களப் பத்தி உங்களுக்கு தெரியாது!..

உனக்குத் தெரியுமா?..

எனக்கும் தெரியாது.. நீங்க தான் சொல்லணும்!.. நானும் தெரிஞ்சுக்கிறேன்!.. 

..... ..... .....!..

என்ன.. ண்ணே.. சும்மா இருக்கீங்க!.. உங்களப் பத்தி சொல்லுங்க.. சரி.. நானே கேக்கிறேன்?.. உங்க சொந்த ஊர் எது?..

நீர்வளமும் நிலவளமும் நெறைஞ்சிருக்கும் தஞ்சாவூர் தான் சொந்த ஊர்.. இங்கே தான் பிறந்தேன்.. ஏழு வயசு வரைக்கும் இங்கே தான் வளர்ந்தேன்..

அதுக்கு அப்புறம்?..
* * *

அதுக்கு அப்புறம்!?..

மனசு திரு. குமார் அவர்களின் 
வலைத்தளத்தில் காண்க!..

அன்பு நண்பர்களுக்கு...

என்னைப் பற்றி நான்!.. - என, எழுதித் தரும்படி 
வலைத் தள நண்பர்களை அழைத்திருக்கும் 
திரு. குமார் அவர்களுக்கு நன்றி..


பதிவுக்குள் பதிவாக நானும் என்னைப் பற்றி எழுதியிருக்கின்றேன்...

இன்றைய தினம் (ஏப்ரல் 26) வெளியாகியுள்ளது..

எனக்கு முன்பாக - கடந்த வாரங்களில்
தம்மைப் பற்றி அறியத் தந்த அனைவருக்கும் வணக்கம்..

சில மாதங்களாக - அவ்வப்போது குமார் அவர்களின் தளமும் 
திரு துளசிதரன் அவர்கள் தளமும் 
திருமதி மனோசாமிநாதன் அவர்கள் தளமும்
எனது கணினியில் திறப்பதில் மிகுந்த தாமதமாகின்றது 

பதிவுகளில் கருத்துரையிடுவது என்பது வெகு சிரமமாக இருக்கின்றது...

ஆண்ட்ராய்டு வழியாக வந்தால் - 
செல்லினம் தட்டச்சு ஒத்துழைப்பதில்லை... 

மேற்குறித்த தளங்களில் பதிவைப் படித்து விட்டு
பதில் ஒன்றும் சொல்லாமல் செல்வது மனதை உறுத்துகின்றது....

இங்கே குவைத்தில் -
தற்போது இருக்கும் இடத்தில் இணைய வேகம் குறைவு..

மாதந்தோறும் இணைய இணைப்பிற்கான அட்டைகளை விற்று
பல்லாயிரக் கணக்கில் பெட்டியைக் கட்டுகின்றார்களே தவிர - 
கவனத்தில் கொண்டு ஒழுங்கு செய்வார் யாரும் இல்லை...

நாள்முழுதும் கைத் தொலைபேசியில் பேசுபவர்கள்
இணைய வேகத்தைப் பெரிதாய்க் கொள்வதில்லை...

இணைய வேகம் சீராக இல்லாததனால் -
கணினியில் பதிவுகளைச் செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதிகம்...

உண்ணாமல் உறங்காமல் பதிவுகளைச் செய்து முறைப்படுத்தி விட்டு -
தளத்தினை ஒருமுறை மூடித் திறந்தால் - 

ஏதாவது ஏடாகூடமாகியிருக்கும்...

இன்னும் ஒருபுறம் -

இரவு வேலை முடிந்து - 
காலையில் அறைக்குத் திரும்பியதில் இருந்து 
பதிவுகளில் மூழ்கி விட்டு 
மதியம் உறங்கலாம் என்று நினைக்கும்போது -

வேலைத் தளத்திலிருந்து அவசர அழைப்பு வரும் - 

இன்றைக்கு மதியமும் சேர்த்துப் பாருங்கள்!.. -  என்று...

அப்போது ஏற்படும் மன உளைச்சல் இருக்கின்றதே!?..

இதிலெல்லாம் உழன்று தான் -
தஞ்சையம்பதியின் பதிவுகள் உங்கள் முன் மலர்கின்றன...

பலதரப்பட்ட மனிதர்கள் வேலையின் காரணமாக
ஒன்றாகத் தங்கியிருக்கும் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில்

எனக்கு உற்ற துணை எனது கணினியும் எனது வலைத் தளமும் தான்!..

இரவு வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும் முதல் வேலை
கணினியைத் திறந்து சகோதர வலைத் தளங்களில் சுற்றி வருவது தான்!..

அன்புக்குரிய அனைவருடைய தளங்களையும் வாசிப்பது மகிழ்ச்சி.. .

அவர்களது கை வண்ணங்களில் - ஆழ்ந்திருப்பது உற்சாகம்.. 

மற்றபடிக்கு,
ஆறுதல் தேறுதல் -  இவற்றுக்கெல்லாம் அருகில் யாரும் இல்லை...

எனக்கு நான்!..
நானே நண்பன்.. நானே எதிரி!..

எனினும் -
இப்படியான அறிமுகத்தால்
மனம் சற்றே நெகிழ்ந்தாற்போல இருக்கின்றது..

திரு. குமார் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவிற்கான இணைப்பு இதோ..

என்னைப் பற்றி நான்...  

இன்னும் கூட சொல்லலாம்... இருக்கட்டும் .. 
மீண்டும் ஒரு இனிய பொழுது கிடைக்கும்...

வாழ்கின்ற வாழ்க்கையை ஓரளவுக்கு 
நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதில் 
மனம் நெகிழ்வாக மகிழ்வாக இருக்கின்றது..

நம்பிக்கை எப்படி வாழ்க்கை ஆகின்றதோ -
அப்படியே நன்னெறியும் வாழ்க்கை ஆகின்றது!...

வாழ்க நலம்!..
***  

திங்கள், ஏப்ரல் 24, 2017

வாழ்க வையகம்..

- : பதிவு எண் 901 :-
***
நேற்றைக்கு முன்தினம் - ஏப்ரல் 22 அன்று உலக முழுதும் -
உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் உலக நாள் அனுசரிக்கப்பட்டது...

இந்த நாளை அன்றோடு மறந்து விடுவதா!..
வாழும் நாட்களெல்லாம் சிந்தையில் கொண்டு செயல்பட்டு நிற்பதா?..

அது அவரவர்க்கான சூழ்நிலைதனைப் பொறுத்தது...


ஆனாலும் -
நமது பாரதத்தில் - அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில்,

சைவ நெறியில்
மூவர் பாடியருளியவை என்ற சிறப்புக்குரிய திருத்தலங்கள் 275..

இத்திருத்தலங்கள் அனைத்திலும் -
தல விருட்சங்கள் பெருமையுடன் விளங்குகின்றன..

275 திருத்தலங்களிலும் தலவிருட்சங்களாகத் திகழ்பவை அறுபத்தேழு வகையான தாவரங்கள்..

எளிமையான புற்கள், குறுஞ்செடிகள், நறுமணம் கமழும் பூங்கொடிகள், வேர் முதல் தளிர் வரை மக்களுக்காகும் மரங்கள் ஆகியன தல விருட்சங்களாக விளங்குகின்றன..

இவற்றுள் விஷத் தன்மையுடன் கூடிய மருத்துவ குணமுடைய செடிகளும் உள்ளடக்கம்...

இவ்வளவையும் ஏன் வகுத்து வைத்தார்கள் - சான்றோர்கள்?..

மண்ணுக்கும் மக்களுக்கும் ஆகட்டும்!.. - என்பதால்..

ஒன்றை விட்டு ஒன்று இல்லை!.. - என்பதால்..

நமது வழிபாடு அறுவகைச் சமயம் என்று பேசப்படும் புகழுடையது..

காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம், வைணவம், சைவம் - என்பன..

கணபதியை முழுமுதற்பொருளாகக் கொண்டது - காணாபத்யம்..
குமரனை முழுமுதற்பொருளாகக் கொண்டது - கௌமாரம்..
சூரியனை முழுமுதற்பொருளாகக் கொண்டது - சௌரம்..
சக்தியை முழுமுதற்பொருளாகக் கொண்டது - சாக்தம்..
வைகுந்தவாசனை முழுமுதற்பொருளாகக் கொண்டது - வைணவம்..
சிவபெருமானை முழுமுதற்பொருளாகக் கொண்டது - சைவம்..

இந்த ஆறு சமயத்திற்கும் முறையே -
அருகம்புல், கடம்பு, எருக்கு, வேம்பு, துளசி, வில்வம் - எனும் இயற்கைச் செல்வங்கள் உரித்தானவை...

இவை அனைத்துமே மக்களுக்கானவை.. மகத்தானவை..

இந்த தல விருட்சங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல!..

அந்த தலத்திற்கும் அதனை அண்டி நிற்கும் மக்களுக்கும் நன்மை வழங்கக் கூடியவை..

இவற்றைப் பேணிக் காக்கும் பொறுப்பு மக்களுடையது..

ஆனாலும்
அந்த அறத்திலிருந்து மக்கள் விலகி நின்றனர்..
யாதும் அறியாதவராகி மயங்கி நின்றனர்..

இடையில் கொஞ்சம் தடுமாறி விட்டோம்...




மீண்டும் முனைப்புடன் உழைத்தால் பூமிக்கு அணிகலன்களான
இயற்கைச் செல்வங்களை மீட்டெடுத்து விடலாம்...

இன்றைக்கு உலகம் கொஞ்சம் கொஞ்சமாக திருந்துகின்றது..
மரங்களைக் காக்க வேண்டும் என்ற ஆர்வம் பீறிட்டு எழுகின்றது...

நம்மிடம் இல்லாத இயற்கைச் செல்வங்களா!..

நலம் விளைவதற்கு நறுமணம் மட்டும் போதும்!.. - என்பது எத்தனை சிறப்பு!..

மல்லிகை!..

இதற்குத் தான் எத்தனை பெருமை..

இல்லறம் நல்லறமாவதற்கு இதுவே காரணம்!..

தளர்ச்சியும் அயர்ச்சியும் மல்லிகையின் நறுமணத்தால் நீங்குவது நிதர்சனம்..

தமிழ்கூறும் நிலத்தைக் கட்டியாண்ட மூவேந்தர்களும் 
தமக்கென ஒரு மலரைக் கொண்டிருந்தனர் என்பது வரலாறு..


பனம்பூ சேரர்க்குரியதாகவும் 
ஆத்தி மலர் சோழர்க்குரியதாகவும் 
வேப்பம்பூ பாண்டியர்க்குரியதாகவும்
சிறப்பிக்கப்பட்டிருக்கின்றன..

வேம்பின் நிழலில் இருந்தாலே போதும்...
நோய்கள் எல்லாம் ஓடிப் போகும்!..

மா, பலா, வாழை இவற்றோடு பனை தென்னை ஆகியவற்றின்
ஒவ்வொரு அங்குலமும் மக்களுக்காக.. மக்களுக்காகவே!..

மரங்களால் தான் எத்தனை எத்தனை பயன்பாடுகள்!..

வேறெந்த நாட்டினருக்கும் கிடைக்காத பொக்கிஷங்களாக
சிறப்புறு மரங்களும் செடிகொடிகளும் நம் நாட்டில் தழைத்திருக்கின்றன...

மருந்துக்காக என்றாலும் கூட மரத்தை வெட்டக்கூடாது!..
- என்ற பண்பாட்டினைக் கொண்டிருந்தது - தமிழினம்...


பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றீரோ நாள் எஞ்சினீரே!.. 
(திருமந்திரம்)

குடத்தில் நீரெடுத்து வந்து ஊற்றியாவது மரம் செடிகொடி எனும் சோலைகளை வளர்த்திடல் வேண்டும் - என, அறிவுறுத்துகின்றார் திருமூலர்..

மரஞ்சா மருந்து கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெட
பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாந்தம் உண்மையின் உளமே அதனால்..
(நற்றிணை/226)

- என்று, கணியன் பூங்குன்றனார் தெளிவுபடக் கூறுகின்றார்...

மரத்திலிருந்து கிடைக்கும் மருந்து உயிரினை காக்கும் ..
- என்றாலும், மரத்தினை அழித்திட வேண்டாம்!..

- என்ற பெருநோக்குடன் நம் முன்னோர்கள்
வாழ்ந்த வாழ்வு நமக்குப் புலனாகின்றது..

நீர்அறம் நன்று நிழல் நன்று தன்இல்லுள்
பார்அறம் நன்று பாத்து உண்பானேல் - பேரறம்
நன்றுதளி சாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால உடன்.. 
(சிறுபஞ்சமூலம்/61)

என்று, அழகுடன் கூறுகின்றார் காரியாசான்...

நீரும் நிழலும் அவற்றினூடாக சாலையும்
அவற்றின் அருகில் அறம் புரியும் மனிதர்கள் வாழும் வீடும்
இதற்கெல்லாம் நல்லருள் பாலிக்கும் ஈசனின் திருக்கோயிலும்!...

இவையெல்லாம் தானே நமது அடையாளங்களாக இருந்தன!..


நீரும் நன்று நிழலும் நன்று - என்றால், 
அதனுடன் இணைந்த வாழ்வும் நன்று தானே!..

அந்த நல்வாழ்வினை எய்துவதற்கு 
இயன்ற வரையில் பாடுபடுவோம்!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
***

சனி, ஏப்ரல் 22, 2017

அருட்தொண்டர்

காஞ்சி மாநகரில் இன்னும் பரபரப்பு அடங்கவில்லை.

மக்கள் அங்கும் இங்குமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

''..சில தினங்களாக காணப்படாமல் இருந்த தருமசேனர் திருவதிகையில் இருக்கின்றாராமே!.. அதுவும் மயானச் சாம்பலைப் பூசிக் கொள்ளும் சிவனின் சமயத்தைச் சார்ந்து விட்டாராமே!..''

''..நமக்கெல்லாம் வழிகாட்டி தலைமைப் பீடத்திலிருந்த  அவருக்கு  இப்படி மதி கெட்டுப் போனதேனோ?.. இதில் தீராத சூலை எனும் பொய்ப்பேச்சு வேறு!..''

''..நமது பள்ளியிலும் பாழியிலும் இல்லாத அருமருந்துகளா?.. மணி மந்திர ஔஷதங்களை மீறிய மற்றொன்றினால் நோய் தீர்ந்திடக் கூடுமோ!..''


''..அவருடைய சகோதரியாம்.. திலகவதி..ன்னு பேராம்.. திருவதிகை கோயில்ல அலகிட்டு மெழுக்கிட்டு திருவிளக்கேற்றி பூத்தொடுத்து பணி செய்பவராம்.. அவர் கொடுத்த சாம்பலைப் பூசிக் கொண்டாராம்!..''  

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் 
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் 
நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையிற் பலி கொண்டுழல்வாய் 
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே!... 

''..அப்படின்னு வயிற்று வலியோடு பாட்டு பாடினாராம். உடனே சூலை நோய் தீர்ந்து ஒழிந்ததாம்..  உடனே மண்டையோட்டில் பலி ஏற்கும் அந்த மயானக் கூத்தனும் மகிழ்ந்து திருநாவுக்கரசு.. அப்படின்னு பட்டம் கொடுத்தானாம்!..''

''..இந்தக் காலத்தில இதையெல்லாம் நம்ப முடியுமா?.. அதான் நம்ம ஆளுங்க ஓடிப்போன ஆளைத் தேடிப்பிடித்து இன்னிக்கு கொண்டு வர்றாங்க.. மகாராஜா மகேந்திர பல்லவர் நேரடி விசாரணை!..''

''.. இன்னொன்றும் கேள்விப்பட்டேனே.. சேனாதிபதி முதல்ல கூப்பிட்டதும் நாமார்க்கும் குடியல்லோம்!.. நமனை அஞ்சோம்!.. போடா.. உன் வேலையப் போய்ப் பார்!.. அப்படின்னாராமே!.. ஆனாலும் நம்ம ஆளுங்க விடுவாங்களா!.. கட்டி இழுத்துக்கிட்டு வர்றாங்க!..''

இப்படியெல்லாம் - பேசிக் களித்திருந்தனர் - காஞ்சியின் மக்கள். 

ஆனால்,

காஞ்சியின் பெருவீதிகளில் பிதற்றித் திரிந்தவர்கள்
அனைவரும்  வாயடைத்துப் போகும் வண்ணம்
அடுத்தடுத்து அற்புதங்கள் நிகழ்ந்தன.

அதோ - ஆரவாரத்துடன் வந்து கொண்டிருந்தனர் பல்லவனின் படையாட்கள்.

அவர்களுக்கு மத்தியில் திருவதிகையில் பிடிக்கப்பட்ட - திருநாவுக்கரசர்.

''.. சமயம் துறந்து ஓடிய தருமசேனரைத் தண்டித்து ஒறுக்க வேண்டும்!..''

தன் முன் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரை நீற்றறையில் இடுமாறு  உத்தரவிட்டான்.

பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணி கேட்கக் கடவோமோ பற்றற்றோமே!..

- என்று சிவானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திருந்த , திருநாவுக்கரசரை பெருங் களிப்புடன் - சுண்ணாம்பு நீற்றறையில் இருத்தித் தாளிட்டனர்.

ஏழு நாட்கள் கழிந்த நிலையில் - மகிழ்வுடன் நீற்றறையின் தாள் திறந்து நோக்கியவர்கள் மயக்குற்று வீழ்ந்தனர்.

''..இது ஏதோ மாயம்.. இனி நஞ்சு ஊட்டுவோம்!..'' - என முடிவெடுத்து கணக்கிலாதவர் கூடி நின்று , திருநாவுக்கரசருக்கு நஞ்சு கலந்த வஞ்சனைப் பால்சோற்றினை உண்ணக் கொடுத்தனர்.

நஞ்சுடைய கண்டனின் நற்றாள் நீழலில் இன்புற்றிருக்கும் திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு நஞ்சும் அமுதமாயிற்று.

''..இதுவும் மாயமே!.. எல்லாம் நம்மிடம் கற்றவை. இனி மண்ணில் ஆழப் புதைத்து மதயானையைக் கொண்டு இடறுவோம்!..'' - எனத் தீர்மானித்தனர்.

அதன்படி கொலைக் களத்தில் குழி வெட்டினர். அது தமக்குத் தானே ஆகப் போகின்றது என்பதை அறியாமல்!..

குழிக்குள் இறக்கப்பட்ட திருநாவுக்கரசரை  இடறுமாறு -  மதயானையை அவிழ்த்து விட்டனர் . ஓடி வந்த மதயானை சுவாமிகளைக் கண்டதும் பெருங் குரலெடுத்துப் பிளிறியது. மும்முறை வலங்செய்து வணங்கியது.

தன்னை ஏவி விட்டவரை எற்றித் தள்ளி மிதித்தவாறு ஓடிப்போனது.

''..மீண்டும் பெரும் மாயமே நிகழ்ந்தது!.  இனி, மீள இயலாத வண்ணம் கருங் கல்லுடன் சேர்த்துப் பிணைத்து பெருங்கடலுள் தள்ளி விடுவோம்.  தப்பிப்பது எங்ஙனம்?.. அதையும் காண்போம்!..'' - என்று ஆர்ப்பரித்தவாறு, அடுத்து ஆக வேண்டியதைக் கவனித்தனர்.

பிழை ஏதும் நேர்ந்து விடாதபடிக்கு பெருங்கவனம் கொண்டு - கருங்கல்லுடன் பிணக்கப்பட்ட  திருநாவுக்கரசர் - திருப்பாதிரிப்புலியூருக்கு அப்பால் - வங்கக் கடலுள் தள்ளப்பட்டார்.

வங்கக் கடலோ - தங்கத் தமிழ் மகனைத் தாங்கிக் கொண்ட மகிழ்வில், தன்னுள் வாங்கிக் கொண்ட மகிழ்வில் - ஆரவாரித்தது.

பெருமானின் திருநாவிலிருந்து நற்றமிழ்ப் பதிகம் மலர்ந்தது.


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே!.

இறுகிய கருங்கல்லும் இளகியது.

அமிழ்தத் தமிழினைக் கேட்டு இன்புற்ற -
அந்தக் கருங்கல் கடலுள் ஆழாமல் மிதந்தது.

''..இப்படி ஆயிற்றே!..'' - எனப் பரிதவித்து  கரையில் நின்று கலங்கிய அன்பர்கள் கண்ணெதிரே நிகழ்ந்த அற்புதங்கண்டு அலைகடலினும் பெரிதாய் ஆரவாரித்தனர்.

திண்ணிய கல் தெப்பமாக மாறியது.  ஆனந்தத் தாலாட்டு இசைத்தவாறே - அலைகடல் - ஐயனைக் கரையில் சேர்த்தது.

''..எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்!..''
- என்று எங்கும் ஆனந்தச் சங்குகள் முழங்கின.

''..பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் - சங்காரம் நிஜம்!..''
- என்று முழங்கிய சங்கொலியினைக் கேட்டு
- செவிப்பறை கிழிந்து போனது சிறு மதியாளருக்கு.

கடலிலிருந்து கரையேறிய திருநாவுக்கரசர் - அடியார் புடைசூழ,
திருப்பாடலீச்சுரம் எனும் திருப்பாதிரிப்புலியூர் திருக்கோயிலின் திருப்படிகளைத் தொட்டு வணங்கியவாறே,

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி
மறவாதிருக்க வரந்தர வேண்டும்!..

- என்று பாடிப் பரவினார்.

நிகழ்ந்தவை அனைத்தையும் அறிந்த மகேந்திர பல்லவன் ஓடோடி வந்து உத்தமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கண்ணீரால் கழுவி நின்றான்.

அவனைத் தேற்றி எழுப்பிய திருநாவுக்கரசர் - பஞ்சாட்சரம் ஓதி திருநீறு அளித்தார். அந்த அளவில் மனம் மாறினான் மன்னன் மகேந்திரன்.

பாழிகளில் இருந்தும் பள்ளிகளில் இருந்தும் மீண்டு வந்தனர் மக்கள். அடைத்துக் கிடந்த ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டன.

அஞ்செழுத்து மந்திரம் - ஆனந்த வானில் எங்கெங்கும் எதிரொலித்தது.


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.. (0033)

எனும் திருக்குறளின்படி -
சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்தவர் - திருநாவுக்கரசர்..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

அப்பா!.. - என அழைத்து மகிழ்ந்தார் ஞானசம்பந்தப் பெருமான்..

ஞானசம்பந்தப் பெருமான் அழைத்து மகிழ்ந்ததாலேயே - 
நாவுக்கரசருக்கு - அப்பர் எனும் திருப்பெயர் வழங்கலாயிற்று..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திருவீழிமிழலையில் மக்கள் பஞ்சம் தீர்ப்பதற்கு மாற்றுக் குறையாத பொற்காசு வழங்கினான் - இறைவன்..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திருப்பைஞ்ஞீலியில் - திருநாவுக்கரசருக்கென்று பொதி சோறும் நீரும் தாங்கி வந்து பரிமாறினான் - இறைவன்.. 


சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திருமறைக்காட்டில் - வேதங்களால் அடைக்கப்பட்ட
பெருங்கதவங்களின் திருத்தாழ்கள் திறந்து கொண்டன..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

திங்களூரில் - அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரைக் காணாமலேயே - தனது ஞானகுருவாகக் கொண்டார்..

அப்பூதி அடிகளின் மகன் நாகந்தீண்டி இறந்தும் - மீண்டு எழுந்து வந்தனன்..

சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்த அதனாலேயே - 

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தன்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனியுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே!..

- என்று தென் கடம்பூர் திருக்கோயிலில் உரிமையுடன் விண்ணப்பம் செய்து கொள்ள முடிந்தது..


அப்பர் பெருமானின் பெருமை அளவிடற்கரியது..

ஞானசம்பந்தப் பெருமானும் பின்னாளில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் திருப்பதிகங்கள் பாடியிருந்தாலும்

அவை ஒருசேர - தேவாரம் என வழங்கப்பெறுவது நாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகங்களைக் கொண்டு தான்!..

தேவாரத் திருமுறைகளின்படி திருப்பதிகம் பெற்றதாகக் குறிக்கப்படும் திருத்தலங்கள் - 274..

அவற்றுள் - திருநாவுக்கரசர் தரிசித்த திருத்தலங்கள் - 123..

இத்திருத்தலங்களைப் போற்றி அருளிய திருப்பதிகங்கள் - 312..

மூவருடைய திருவாக்கில் இடம் பெற்றதாகக் கொண்டு
வைப்புத் தலங்கள் எனக் குறிக்கப்படும் திருத்தலங்கள் - 301..

அவற்றுள் திருநாவுக்கரசரால் குறிக்கப்படுபவை - 172..

ராஜராஜ சோழன் தேவாரத்தைத் தேடியலைந்து - 
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறையில் அவற்றைக் கண்டடைந்து -
நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு தொகுத்தபோது -

திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் எனக் கிடைத்தவை - 312..

ஆயினும், அப்பர் பெருமான் அருளியவை நாலாயிரம் திருப்பதிகங்கள் என்று ஒரு சொற்குறிப்பும் உண்டு..

உழவாரப் படை கொண்டு திருப்பணி செய்தவர் அவர்.

புறச்சமயம் சென்று திரும்பியவர். அதனால் விளைந்த இன்னல்களைப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டவர்.

ஆருயிர்களிடத்து அன்பில்லாத ஆன்மீகத்தை - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடித்துரைத்த உத்தமர்.

மக்கட்தொண்டு இயற்றிய புண்ணியர். 
தமது திருவாக்கினால் - மக்களை நெறிப்படுத்தியவர்.

திருக்கயிலாயக் காட்சியினை - திருஐயாற்றில் கண்டவர்.


திருப்பூந்துருத்தி, திருக்கடவூர், திருவீழிமிழலை, திருஆரூர், திருமறைக்காடு - எனும் தலங்களில் ஞானசம்பந்தப்பெருமானுடன் இணைந்து வழிபட்டவர். 

பஞ்சமுற்ற காலத்தில் மக்களின் பசித் துயர் நீக்கியவர்.
மக்கள் பணியே மகேசன் பணி!.. - என்பதை மண்ணுலகிற்கு உணர்த்தியவர்.

அப்பர் ஸ்வாமிகள் - ஈசனுடன்
இரண்டறக் கலந்த நாள் - சித்திரைச் சதயம்...

இன்று சித்திரை சதயம்..
திருப்புகலூரில் ஈசனுடன் கலந்த நாள்.. 

திருப்புகலூரிலும் மற்ற சிவாலயங்களிலும்
திருநாவுக்கரசர் குருபூஜை சிறப்புற நிகழ்கின்றது..

தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில்
மூன்று நாள் வைபவமாக அனுசரிக்கப்படுகின்றது..
***

அத்துடன் வருடந்தோறும் 
ஏப்ரல் 22 ஆகிய இன்றைய நாள் 
உலக நாளாகவும் அனுசரிக்கப்படுகின்றது...



அப்பர் பெருமான் இவ்வுலகப் பருப்பொருளினைத் 
தரிசித்து மகிழ்கின்றார் தெரியுமா?..

திருவதிகைத் திருத்தலத்தினில்
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி!..
என்று புகழ்ந்துரைக்கும் அப்பர் ஸ்வாமிகள்

தில்லைச் சிற்றம்பலத்தில்
மற்றைக் கரியானை நான்முகனைக் கனலை காற்றைக் 
கனைகடலை குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!..
என்று உருகி நின்று வணங்குகின்றார்..

காணும் அனைத்திலும் 
ஈசன் எம்பெருமானைக் கண்டு கொள்ளுதற்கு
மனம் பழகி விட்டால் - பின் எதற்கும்
தீங்கு செய்ய ஒண்ணாது..

அதுவே இம்மண்ணிற்கு
மனிதர்கள் செய்யும் நன்றிக்கடன்..


அப்பர் பெருமான் - திருப்புகலூர்

அப்பர் பெருமான் காட்டியருளிய வழியில் நின்று 
இயன்ற மட்டும் இயற்கையிடத்து அன்பு காட்டி
சிவநெறி பேணுவோம்..
தவநெறி பூணுவோம்!..

அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *